districts

img

ஸ்மார்ட்டி சிட்டி பணிகள்: வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை

வேலூர், ஜூலை 12 - வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், அணைக்கட்டு, வேலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் அசோக்குமார், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்த்குமார், துணை மேயர் சுனில்குமார் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர், சாலை மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டே முடிய வேண்டிய பணிகள் இன்னும் முழுமையாக முடிக்காமல் அனைத்து ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளும் மெத்தனமாக நடந்து வருகிறது. எனவே அந்தந்த பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த தகவல்களை மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அவர்களுடன் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நிறைவாக பேசிய ஆட்சியர், “கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் சாலை அமைக்கும் பணியின் போது சாலையில் இருந்த பைக், ஜீப் அகற்றாமல் சாலை அமைத்துள்ளனர்.  இதில் முறையாக கண்காணிக்க தவறிய மாநகராட்சி ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனி இதுபோன்ற தவறுகள் நடந்தால் ஒப்பந்ததாரர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை செய்தார். குடிநீர், பாதாள சாக்கடை பணிகளுக்கு மீண்டும் பள்ளம் தோண்டி குழாய்களை பதிக்க கூடாது. அந்த பணிகளை சாலை போடுவதற்கு ம முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும். ஏற்கனவே போடப் பட்ட சாலைகளை தோண்டி மீண்டும் குழாய் பதித்தால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே அதனை தவிர்க்க அனைத்து துறை அலுவலர்களும் கலந்தாலோசித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.