districts

ரூ.8 லட்சம் மோசடி: வாலிபருக்கு சிறை

வேலூர்,ஜன.8- வேலூர் அருகே ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (27). சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். வேலூரில் உள்ள உணவகம் வேலை செய்து வந்தார். பண ஆசை அவரை திருடனாக மாற்றியது. 2017 ஆம் ஆண்டு முதல் வேலூர் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளார். இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். காவல் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டம் போடப்பட்டு 11 மாதங்கள் சிறையில் அடைத்துள்ளனர். அதன்பிறகு வெளியே வந்தவர் திருந்தவில்லை. மாற்று வழியில் பணம் சம்பாதிக்க முடிவெடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி பட்டதாரி இளைஞர்களையும், பெண்களையும் ஏமாற்றியுள்ளார். இதற்காக வேலூர் மத்திய சிறையில் வேலை செய்து வருவது போன்ற ஒரு போலியான காவலர் அடையாள அட்டை தயார் செய்துள்ளார்.

அதை மற்றவர்களிடம் காட்டி சிறை துறை, காவல் துறை, பல அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வசூலித்துள்ளார். அவரிடம் ஏமாந்த கணியம்பாடி பகுதியை சேர்ந்த அரவிந்த், பிரம்பபுரத்தை சேர்ந்த சாந்தகுமார், விஷ்ணுகுமார், மணிகண்டன் ஆகிய பட்டதாரி இளைஞர்களும்  உதயகுமிரிடம் பணம் கொடுத்து ஏமாந்து புகார் அளித்தனர். இதேபோல், பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த பெண்களிடம் “நீங்கள் 20 பேர் கொண்ட மகளிர் குழுவை உருவாக்குங்கள், அதில் தலா 2800 ரூபாய் கொடுத்தால் 85 ஆயிரமும், 5000 கொடுத்தால் ரூ.1 லட்சம் வரைகடன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். இது போல மொத்தம் ரூ.8 லட்சத்து 33,800 வரை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து இதுரை 7 புகார்கள் வந்த நிலையில், வழக்கு பதிவு செய்த வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் உதயகுமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து 21 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் போலி அடையாள அட்டையையும் பறிமுதல் செய்தனர். பிறகு வேலூர் சிறையில் அடைத்தனர்.