அணைக்கட்டு, நவ. 17- வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் சென்னை - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. பள்ளிகொண்டா பேரூராட்சியில் வெட்டுவாணம், சின்ன கோவிந்தம்பாடி, கீழாச்சூர், ராமாபுரம், வேப்பங்கால் என 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 25,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கிராமங்களில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்கா குப்பைகளாக தரம் பிரித்து வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகளை எந்திரங்கள் கொண்டு வெட்டப்பட்டு பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பணைக்கும் அனுப்பி வைக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள பெரிய ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கழிவுகளால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மலட்டுத்தன்மை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உபரிநீர் வெளியேறும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குப்பைகளை முறையாக தரம் பிரிக்க நவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.