வேலூர், ஜூலை 21 - வேலூர் மாவட்ட விடுதலை போராட்ட வீரர்கள் படங்களில் தோழர் கே.ஆர்.சுந்தரம் படம் இடம் பெறாததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர்கள் படங்களில் தோழர் கே.ஆர்.சுந்தரம் படம் இடம்பெறவில்லை. இதுகுறித்து கட்சியின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி கூறியதாவது:- விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவைப் போற்றிட மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்டக்குழு சார்பில் ஆட்சியருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய தேசத்தின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளோம். ஜூன் 22 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘ஏ’ பிளாக் தரைதளத்தில் மாவட்டம் முழுவதுமுள்ள 124 விடுதலை போராட்ட வீரர்களின் படங்களை ஆட்சியர் திறந்து வைத்தார். இதில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சிறைக்கு வெளியே மட்டுமன்றி, சிறைக்கு உள்ளேயும் போராடி தடியடிகளையும், தழும்புகளையும் பரிசாகப் பெற்றவர் மறைந்த முதுபெரும் தலைவர் கே.ஆர்.எஸ் என்று அனைவராலும் அழைக்கப்படும் தோழர் கே.ஆர்.சுந்தரம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவான கே.ஆர்.சுந்தரம் தாராபடவேடு பேரூராட்சிமன்றத் தலைவராக சுமார் 30 ஆண்டுகளும், குடியாத்தம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறையும் பணியாற்றியவர் அந்த தலைவரின் படம் இடம்பெறாதது இயல்பானதாகத் தெரியவில்லை. இந்த நிகழ்வு வருத்தத்துக்கும், கண்டனத்திற்கும் உரியது என்பதை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இது இயல்பாக ஏற்பட்ட பிழை எனில் உடனே சரி செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கக் கோருகிறோம். வேறு ஏதேனும் காரணம் இருப்பின் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.