districts

img

சிவகாசி: பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலை, கடையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 13 பேரும், கிச்சநாயக்கன்பட்டியில் ஒருவரும் என இந்த இருவேறு இடங்களில் நிகழ்ந்த வெடி விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவகாசி அருகேயுள்ள கங்காகுளம், கோபால்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமுர்த்தி, இவருக்கு ரெங்கபாளையத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் சான்றிதழ் பெற்ற பட்டாசு ஆலை உள்ளது. ஏழு அறைகள் கொண்ட இந்த ஆலையில் சுமார் 25 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்தப் பட்டாசு ஆலையில் சங்கு சக்கரம், பூந்தொட்டி உள்ளிட்ட சிறிய வகை வெடிகள் மட்டுமே தயாரிக்க அனுமதி உண்டு. சுந்தரமூர்த்தி பட்டாசு ஆலையின் முன் பட்டாசுக் கடைகளையும் அனுமதி பெற்று நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், தீபாவளி பண்டிக்கைக்கு கூடுதல் பட்டாசுகளைத் தயாரிப்பதற்காக ஆலையின் வெளிப் பகுதியில் கொட்டகை அமைத்து, சட்டவிரோதமாக சங்கு சக்கரம், பூந்தொட்டி பட்டாசு தயாரிப்பு பணியிலும், பட்டாசுகளை அட்டைப் பெட்டிக்குள் அடைக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், பட்டாசுக் கடை முன் மாதிரி பட்டாசுகளை வெடித்த போது, தீப்பொறி பரவி பட்டாசுக் கடை மீதும், வெளிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீதும் விழுந்து தீப்பிடித்துள்ளது.

அப்போது, பட்டாசுகள் தொடந்து கொண்டிருந்ததால், தொழிலாளர்கள் தப்பியோட முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டதால், சம்பவ இடத்திலேயே 13 பேர் உடல் கருகி பலியாகினர்.

இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், வத்திராயிருப்பு பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இதுதொடர்பாக பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர் கனகராஜை எம்.புதுப்பட்டி போலீசார் கைது செய்தனர். பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார், போர்மேன் கனகராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.