ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, வடமாநில வாலிபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை சரக டிஐஜி பொன்னி தலைமையிலான தனிப்படை, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான தனிப்படைக்கு வெளிமாநிலத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக லாரியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் அருகே உள்ள காதி போர்டு காலனி அருகே ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை மெயின் ரோடு, கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நள்ளிரவில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது ஓசூரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி வந்துகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை, பாக்கு போன்ற போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
இதனையடுத்து, லாரியை ஓட்டிவந்தவரை விசாரிக்கும்போது,அவர் சேலம் பழைய சூரமங்கலம் மணிகண்டன் வயது 31 என்பது தெரிய வந்தது. மேலும் அந்த லாரியில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த பெல்லதே பச்ச கொடியா என்பவரது மகன் பிரகாஷ் வயது 35, மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா கே. புதுப்பட்டி சுப்புராஜ் வயது 27, வத்திராயிருப்பு கோவிந்த நல்லூர் சக்தி முருகன் வயது 29 ஆகியோர் லாரியில் இருந்தனர்.
இதனையடுத்து, தனிப்படை போலீசார் லாரியை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர், தடை செய்யப்பட்ட பொருட்கள், லாரி உள்ளிட்டவைகளை கைப்பற்றி, வெளிமாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.