districts

img

சிவகாசி அருகே நாயைக் கொன்று குடிநீர்த் தொட்டியில் வீசிய அடையாளம் தெரியாத நபர்கள்: போலீசார் விசாரணை

சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில்  நாயின் சடலத்தை போட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது புதுக்கோட்டை கிராமம். இங்கு சுமார்  300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊரின் அருகிலேயே மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து தான் ஊர் முழுவதும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த தொட்டியை 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை ஊராட்சி பணியாளர் சுத்தம் செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றப்படவில்லை. இதையடுத்து, ஊராட்சி பணியாளர், வழக்கம் போல  சுத்தம் செய்வதற்காக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் மேல் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு துர்நாற்றம் அடித்துள்ளது. எனவே, உள்ளே சென்று பார்த்த போது, இறந்த நிலையில் உள்ள நாயின் சடலம் அங்கு கிடந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊராட்சி பணியாளர், இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த சிவகாசி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் அங்கு விசாரணை நடத்தினார். மேலும், இச்சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;