districts

img

வெடி விபத்தில் 4 பேர் பலி: பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து

வெடி விபத்தில் 4 பேர் பலி:

பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து

தலைமறைவான உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர், ஜன.2-

திருவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆலை உரிமையாளர் மீது, 4 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடுமுருகன் (40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை களத்தூர் அருகே நாகலாபுரத்தில் உள்ளது. இங்கு 15 அறைகளில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சனியன்று காலை பட்டாசு ஆலையின் ஒரு அறையில் உராய்வு காரணமாக வெடி மருந்துகள் பயங்கரசத்தத்துடன் வெடித்து சிதறியதில், 8 அறைகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த குமார் (38), சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பெரியசாமி (55), பி.பாறைப்பட்டியை சேர்ந்த செல்வம் என்ற வீரக்குமார் (40) மற்றும் முருகேசன் (35) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த 9 பேர் சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக நத்தம்பட்டி காவல் துறையினர், பட்டாசு ஆலை உரிமையாளரான வழிவிடுமுருகன் மீது, இந்திய வெடிபொருள் சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை காவல் ஆய்வாளர்கள் ராசு (நத்தம்பட்டி), பிரகஸ்பதி (வத்திராயிருப்பு), ஆனந்தகுமார் மற்றும் 7 காவலர்கள் என மொத்தம் 10 பேர் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேலும், பட்டாசு ஆலையில் பணியாளர்களுக்கு வெடி மருந்துகளை கைளுவது குறித்த முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்று காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார்.