விருதுநகர், செப்.15- தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டமானது ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்ட மாகும்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமாவளவன் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சிவகாசி மாநகராட்சியில் உள்ள பொத்தமரத்து ஊரணி பகுதியில் வசித்து வந்த ஏழை, எளிய குடும்பத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவர்கள் அனைவரும் வறுமைக் கேட்டிற்கு கீழே உள்ள மக்கள். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவது மிகுந்த துயரை தருகிறது. சொந்த மண்ணிலேயே அம்மக்கள் அகதிகளாகும் நிலை ஏற்படுகிறது. ஏராளமான மக்கள் வேறு நகரங்களுக்கோ அல்லது எஸ்டேட் பகுதிக்கோ சென்று வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு சிவகாசி மாநகராட்சி எல்லைப் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், அருப்புக்கோட்டை அருகே உள்ள நார்த்தம்பட்டி மக்களுக்கு சுடுகாட்டு பாதை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம்’’ என்றார். மேலும் கூறுகையில், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கக் கூடியவர்களாக ஏராளமான பெண்கள் உள்ளனர். அவர்களை அவசியம் மேம்படுத்த வேண்டும். படித்த பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். படிக்க வாய்ப்பில்லாத பெண்கள் சொல்லொண்ணா துயரத்தில் சிக்கி உளறுகிறார்கள். அவர்கள் ஏற்கனவே, உழைத்து சுரண்டப்பட்டி ருப்பதால், சுரண்டப்பட்ட ஊதியத்தை திரும்பத் தருவதால் அதை உரிமைத் தொகை என அரசு அறிவித்துள்ளது. இத் திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பெண்களை மேம்படுத்த இது வாய்ப்பாக இருக்கும். பெண்களுக்கு பயன் படுகிற திட்டம். இத்திட்டத்தை எந்த காலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்த முடியாது என்றார்.