தேனி, ஜன.2- கூடலூர் அருகே காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாய் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, இலவம் மரங்களை சேதப்படுத்தின. தேனி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது வெட்டுகாடு. இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் வனப்பகுதியை ஒட்டி தனியார் விளை நிலங்கள் உள்ளன. வாழை, தென்னை, இலவம் உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று இரவு வெட்டுகாடு கடமான்குளம் பகுதியில் உள்ள சேதுபதி உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் புகுந்த 9 காட்டு யானை கள் 80க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தின. பலன் எடுக்கும் பருவத்தில் இருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டதால் விவசாயிகளுக்கு கூடுதல் நஷ்டம் ஏற்பட்டது. வனத்துறையினர் யானைகள் வராமல் தடுக்க அகழி அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.