நாகர்கோவில், பிப்.24- கடையால் அருகே ஆலஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி ஜுலியட். இவரும் இடதுசாரி இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் இருவரும் கடையால் பேருராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஜுலியட் 7 ஆவது வார்டிலும், சேகர் 16 ஆவது வார்டிலும் வெற்றி பெற்றனர். பலமுறை தேர்தல்களை சந்தித்த இடதுசாரி இயக்கங்களின் செயல்பாட்டாளர்களான இந்த தம்பதி இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. ஜுலியட் 3 முறை வார்டு உறுப்பினராகவும், ஒருமுறை நேரடி தேர்தல் மூலம் தலைவராகவும் செயல்பட்ட நிலையில், தற்போது ஐந்தாவது முறையாக வெற்றிக்கனியை பறித்து உள்ளார். சேகர் இரண்டு முறை வார்டு உறுப்பினராகவும், ஒருமுறை நேரடி தேர்தல் மூலம் தலைவராகவும் செயல்பட்டு, தற்போது நான்காவது முறையாக வெற்றி பெற்று உள்ளார். கடையால் பேரூராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியின் தேர்தல் பொறுப்பையும் இவரே கவனித்தார். 18 வார்டுகளை கொண்ட கடையால் பேரூராட்சியில் 9 வார்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கைப்பற்றியது. இக்கூட்டணியில் போட்டியிட்ட திமுக 3 வார்டுகளில் வெற்றி பெற்றது. கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில் இந்த பேரூராட்சி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜுலியட் இரண்டாவது முறையாக பேரூராட்சி தலைவராகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. கடையால் பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் நன்கு அறிமுகமான சேகர் ஜுலியட் தம்பதியினரின் பொது வாழ்க்கைக்கு கிடைக்கும் அங்கீகாரமே தொடர் வெற்றி என மக்கள் கூறுகின்றனர். நன்றி: தினமலர் (24.2.2022)