மதுரையில் வாக்கு சேகரிக்கச் சென்ற பாஜக வேட்பாளரை, வாக்கு சேகரிக்கக் கூடாது என பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி 54 ஆவது வார்டில் இஸ்லாமிய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வார்டில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மெகருநிஷா, ஞாயிறன்று காஜிமார் பெரிய பள்ளிவாசல் பகுதியில் தனது ஆதரவாளர்கள் ஐந்து பேருடன் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென அவர்களை வழிமறித்துள்ளனர். இதையடுத்து, பாஜகவை சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்றும், தொடர்ந்து மெகருநிஷா மற்றும் அவர்களது ஆதரவாளர்களை உடனடியாக திரும்பிச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர் மற்றும் பாஜக கட்சியினரை பாதுகாப்பாக அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.