சென்னை, மே 29- சிறந்த மார்க்சிய சிந்தனை யாளர் இரா.ஜவகர் என அவரது நினைவேந்தல் கூட்டத்தில் தலை வர்கள் புகழாரம் சூட்டினர். மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவகர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டமும், மலர் வெளியீட்டு விழாவும் தோழமைக் குடும்பம் சார்பில் சென்னை அம்பத்தூரில் சனிக்கிழமை (மே 28) நடைபெற்றது. பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ஹோமியோபதி மருத்துவர் கண்ணன் அவரது படத்தை திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் அவரது நினைவு மலரை வெளியிட நக்கீரன் ஆசிரியர் கோபால் பெற்றுக் கொண்டார். பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், மதுரையில் இருக்கும் போது தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டவர். பின்னர் சென்னைக்கு வந்து கட்சியின் முழு நேர ஊழியராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் திறம்பட பணி யாற்றினார்.
மிகச் சிறந்த எழுத்தாளர், ஆய்வாளர், சிந்தனையாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கினார். அவர் பணிபுரிந்த பத்திரிகைகளில் எல்லாம் இடதுசாரிக் கருத்துகளை பதிய வைத்தவர். கட்டுரைகளை மிக நேர்த்தியாக எடிட் செய்வார். அரசியல் குறித்து வயது வித்தியாசமில்லாமல் அனை வரோடும் விவாதிப்பார். பல்வேறு சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை உருவாக்கி யவர். மதவெறிக்கு எதிராக கருத்தியல் ரீதியாக, சித்தாந்த ரீதியாக பிரச்சாரத்தை முன்னெடுத்தவர். அனைத்து இடதுசாரி அமைப்புகளின் மதிப்பிற்குரிய தலைவராகத் திகழ்ந்தார், அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களுடனும் இணக்கமாகச் செயல்பட்டார். அதற்கு முக்கிய காரணம் அவர் கற்ற மார்க்சியம்தான். எந்த சமூக மாற்றத்திற்காக, லட்சியத்திற்காக அவர் வாழ்ந்தாரோ அப்படிப்பட்ட பாதையில் நாமும் பயணிப்போம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், சிறந்த பத்திரிகையாளர், விமர்சகர், இளம் எழுத்தாளர்களை ஊக்கு வித்தார், சமூகத்திற்கு பயன்படக் கூடிய வகையில் பல இளைஞர் களை உருவாக்கியவர். தான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய லட்சி யத்தை தனது இறுதி மூச்சு வரை நடைமுறைப்படுத்த பாடுபட்டார். அனைவரிடத்திலும் தோழமையுடன் பழகக்கூடியவர், தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவை செய்யும் கம்யூனி ஸ்டாக வாழ்ந்தார் என்று குறிப்பிட் டார். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், மார்க்சிய சிந்தனையாளர், ஆய் வாளர், அனைத்து நூல்களை யும் படித்து அதில் உள்ள குறை களை மிகவும் நாசுக்காக சுட்டிக் காட்டுவார். அனைத்து எழுத்தா ளர்களையும் அங்கீகரிப்பார். இடைவெளி இல்லாமல் அனை வருடனும் பழகுவார். கொள்கை தான் நட்பு, நட்புதான் கொள்கை என்று வாழ்ந்தவர். எழுத்தை தொழிலாகக் கருதாமல், எழுத்தை புரட்சிக்கான ஆயுத மாகக் கருதியவர். அனைவரை யும் இடதுசாரிக் கருத்துகளை பேச வைக்க வேண்டும் என்று முயற்சித்தவர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய நீரோட்ட அரசியலில் பங்கேற்பதற்கு அவரும் ஒரு காரணம் என்றார். நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால், மீ.தா.பாண்டியன் (தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா), மூத்த பத்திரிகையாளர் பா.ஜீவ சுந்தரி, ஜி.மூர்த்தி, ஆ.பத்மநாபன், நாச்சம் சீனு ஆகியோரும் பேசினர். முன்னதாக கிருஷ்ணவேணி வரவேற்றார். ஐ.பூ.டார்வின் நன்றி கூறினார்.