மதுரை, செப்.9- டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கடந்த ஜூலை 18 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், டாஸ்மார்க் கடைகளில் மதுபான பாட்டில்கள் அதிக விலை வைத்து விற்பனை செய்தால் பணிநீக்கம் மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வெள்ளியன்று மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ச.விசாகன் ஆய்வு மேற்கொண்டு, 6 கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கூடுதல் விலைக்கு மதுவினை விற்ற 6 கடைப்பணியாளர்கள் உள் விசாரணையை எதிர்நோக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்று மேலாண்மை இயக்குநர் உத்தரவின்பேரில், 3 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் சில்லறை விற்பனைக் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டன. இதில், மதுரையில் உள்ள 15 சில்லறை விற்பனைக் கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், கடை எண் 5461 விற்பனையாளர் ஜி.கண்ணன், கடை எண் 7621 மேற்பார்வையாளர் கே.முருகேசன் ஆகியோர் கூடுதல் விலை ஒரு மது பாட்டிலுக்கு ரூ.10 விலை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் விசாரணையை எதிர்நோக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், 11 கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.5 வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டு, 11 கடைப் பணியாளர்களிடம் இருந்து அபராதத் தொகையாக மொத்தம் ரூ.64,900 நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டது.