கோவையில் செயல்படும் சலூன் கடைகளில் சேகரமாகும் முடி கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் சேகரித்து அகற்ற வேண்டும் என்று சலூன் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கிருந்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு நாள்தோறும் தினமும் 800 டன் முதல் 900 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன. இதனிடையே மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம், பாரதி பூங்கா, பனைமரத்தூர், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற நுண்ணுயிர் மையங்கள் அமைக்கப்பட்டு வெள்ளலூர் வரும் குப்பைகளை குறைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குப்பை மேலாண்மையில் கவனத்தை செலுத்தியிருக்கும் மாநகராட்சி நிர்வாகம், நாள்தோறும் சேகரமாகக்கூடிய முடி கழிவுகளை சேகரிப்பதிலும், அப்புறப்படுத்துவதிலும் கோட்டை விட்டுள்ளது.
கோவை மாநகரில் மட்டும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் முடி கழிவுகள் சலூன் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, அதனை குப்பைத் தொட்டிகளில் போடுகின்றனர். இதனிடையே முடி கழிவுகள் கசிந்து வெளியே வந்தால் சலூன் கடை நடத்தும் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் மாநகராட்சி அதிகாரிகள் அபராதமாக வசூலிக்கின்றனர். முடி கழிவுகள் சாலைகளில் வந்துவிடுவதாக அபராதம் வசூலிக்கும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், அதற்கான தீர்வு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ளனர். இதனால் சலூன் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வரி விதிக்கும் மாநகராட்சி நிர்வாகம் முடி கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வை எடுக்க அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கே.எஸ்.எம்