திண்டுக்கல், ஆக.18- திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு பேருந்து இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டத்தலைவர் ஏ.கே.முகேஷ் தலைமை வகித்தார். பாலர் பூங்கா அமைப்பாளர் பாலமுருகன் ஆதரித்துப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மீனாட்சி நாயக்கன்பட்டி ஊராட்சிக்குப்பட்ட பல பகுதிகளிலிருந்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். போராட்டத் தலைவர்களான ஏ.கே.முகேஷ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மண்டல பொது மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது பள்ளிக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவுற்றதும் பேருந்து வசதி செய்து தருவதாக மண்டல பொது மேலாளர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. (நநி)