தேனி, டிச.29- தேனியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருகை தந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கூட்டுறவுத் துறை மூலம் பெறப்பட்ட நகைகடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வரும் திங்கள் முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் தமிழகத்தில் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட்ட 35 லட்சம் நகைகடன்களில் 14.5 லட்சம் நகைகடன்கள் மட்டுமே ஏற்புடையது. அதாவது ஒரு குடும்பத்திற்கு 40 கிராம் நகைகள் கடனில் வைத்திருப்பது மட்டுமே ஏற்புடையது. நகைக்கடன்களை பெறுவதற்கு கூட்டுறவு துறை தலைவர்கள் உள்ளிட்ட யாரேனும் பணம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலே நகைக்கடன்கள் தள்ளுபடி செய்தது தற்போதைய தமிழக அரசு தான். தற்போது பொட்டாஷ் உரங்கள் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.