மதுரை,டிச.9- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர் கோழிய நேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் கீழத்தூவல் காவல்நிலையத்திற்கு விசார ணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். பின்னர் காவல்நிலையத்திலிருந்து வீட்டிற்கு வந்தவர் ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்தார். போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், மணிகண்டன் மரணம் தொடர்பாக பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் என்கிற யூடியூபர் அவதூறாக வீடியோ வெளியிட்டார். புகாரின் அடிப்படையில் மதுரை புதூர் பகுதியில் குடியிருக்கும் மாரிதாஸை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் விமானப்படை, ஒன்றிய அரசின் கருத்துகளுக்கு எதிராக மாரிதாஸ் பதிவிட்டுள்ளதால் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்ஹா தெரிவித்துள்ளார்.
மாரிதாஸை கைது செய்யும் போது, போலீசாருடன் பாஜகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து அவதூறு மணிகண்டன் மரணம் தொடர்பாக ஏன் மீடியாக்களில் விவாதம் நடத்தப்படவில்லை. மு.க.ஸ்டாலின் எங்கே போனார்? குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவை திக, திமுக ஆதரவாளர்கள் கேலி செய்யும் விதமாக பதிவிடுகின்றனர். ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என மாரிதாஸ் அடுத்தடுத்து அவதூறான கருத்துக்களை யூடியூபில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதேபோல் டிவிட்டரிலும் அவதூறு கருத்தை பதிவிட்டிருந்தார். கைது செய்யப்பட்ட பின்னர் அப்பதிவை நீக்கினார்.