கடமலைக்குண்டு, ஆக.12- தேனி மாவட்டம் வருசநாட்டில் இருந்து திண்டுக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணிக்கு அரசு பேருந்துகிளம்பி சென்றது. பேருந்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். வருசநாட்டை கடந்து வைகைநகர் கிராமத்திற்கு வரும் போது திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. போதிய அளவு பராமரிப்பு இல்லாமல் மேற்கூரை சேதமடைந்த நிலையில் காணப்பட்டதால் மழை பெய்ய தொடங்கிய சில நிமிடங்களில் பேருந்துக்குள் நீர்க்கசிவு ஏற்பட தொடங்கியது. வழிநெடுகிலும் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்ததால் பேருந்துக்குள் அதிக அளவிலான நீர் ஒழுக தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அனைவரும் இருக்கைகளை விட்டு எழுந்து நின்றனர். ஒரு சிலர் குடைகளை பிடித்தவாறு சீட்டில் அமர்ந்து பயணம் செய்தனர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் மழை நீர் ஒழுக தொடங்கியதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துக்குள் ஆங்காங்கே குவிந்து நின்றனர். ஏற்கனவே கடமலை-மயிலை ஒன்றிய மலை கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் அவ்வபோது பழுதாகி சாலைகளில் நின்று விடுகிறது. மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு தரமான அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.