districts

img

சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்கிட ரயில்வே நிர்வாகம் உத்தரவு

சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்கிட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 12.6.22 அன்று வைகாசி விசாகத் திருவிழா. அன்றைய தினம் திருச்செந்தூர், பழனி ஆகிய முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் பயணம் செய்வார்கள்.

அன்றாட பயணி வண்டிகளில் கோடைகாலம் ஆதலால் இடம் போதாது. எனவே சிறப்பு ரயில்களை ஒரு வாரம்
இயக்கிட பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக  பழனிக்கு சிறப்பு ரயில்;
பழனியில் இருந்து திருச்செந்தூருக்கு திண்டுக்கல் திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில்;
செங்கோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில் ;
செங்கோட்டை திருநெல்வேலி பயணி வண்டியை நீட்டித்து இயக்கிட வேண்டும்;
செங்கோட்டையிலிருந்து பழனிக்கு மதுரை வழியாக பயணி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் ;
செங்கோட்டை மதுரை பயணி வண்டியை நீட்டிப்பு செய்து இதனை இயக்க வேண்டும்.
மேற்கண்ட வழித்தடத்தில் சிறப்பு இரயில்களை இயக்கிட பொதுமேலாளரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து, கோரிக்கை  உடனடியாக பரிசீலிக்கப்பட்டு வைகாசி விசாகத்தன்று (ஜூன் 12) காலை மதுரையில் இருந்து பழனிக்கும் , மாலை பழனியில் இருந்து மதுரைக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பதிவில்,

எனது கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி என அதில் தெரிவித்துள்ளார்.