விருதுநகர், ஜூலை.18- மாவட்டத் தலைநகரான விருதுநகரில் வசிக்கும் பொது மக்களுக்கு வாரம் இருமுறையாவது சுத்தமான குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் நகர் குழுக் கூட்டம் விஜயபாண்டி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், நகரச் செயலாளர் எல்.முருகன், நகர்மன்ற உறுப்பினர் கோ.ஜெயக்குமார் உள்ளிட்ட நகர்க்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், விருதுநகர் நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு 16முதல் 17 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் ஆணைக்குட்டம் அணைப் பகுதியிலிருந்து வழங்கப்படும் தண்ணீரானது உப்புத் தன்மை உள்ளதாகவும் உள்ளது. இதனால் இதை பருகும் பொது மக்களுக்கு இருமல், தொண்டை வலி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், சிறுநீரக பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே, குடிநீர் வரி செலுத்தும் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். ஒண்டிப்புலி மற்றும் ஆணைக்குட்டம் ஆகிய பகுதியில் இருந்து எடுக்கும் தண்ணீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப்படி முழுமையாக குடிநீரைப் பெற்று வாரம் 2 முறையாவது குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். மேலும், விருதுநகரில் கழிவு நீரேற்று நிலையங்கள் இயங்காத நிலையில் உள்ளது. இதனால், வீடுகளுக்கு குடிநீருடன் கழிவு நீரும் சேர்ந்து வருகிறது. எனவே, கழிவு நீரேற்று நிலையங்களில் உள்ள மின்மோட்டார்களை உடனடியாக சீர் செய்திட தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.