மதுரை, நவ.6- மதுரை மாநகராட்சி 2-வது வார்டு விளாங்குடி, கரிசல் குளம், திருமால் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் எம். அன்பழகன், எம்.கார்த்திக், பி.பிரசாந்த் மற்றும் இப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், ‘‘மதுரை மாநகராட்சி 2-வது வார்டு விளாங்குடி, கரிசல்குளம் திருமால் நகர் பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகளை மேம் படுத்திட கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தற்போது பெய்துள்ள மழையால் பெரிதும் அவதியடைந்துள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதிக்கு முன்னுரிமை அளித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.