விருதுநகர், மே.27- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பல்வேறு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், கைத்தெளிப்பான் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார். பின்பு, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவது தொடர்பான 57 மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்பு, அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார். மேலும், வேளாண்மைத்துறையின் சார்பில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கைத்தெளிப்பான், டிரம் மற்றும் இடுபொருட்களை வழங்கினார். இந்த தணிக்கையின் போது சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ். நேர்முக உதவியாளர்(விவசாயம்) சங்கர் எஸ்.நாராயணன், வட்டாட்சியர் உமா மகேஷ்வரி, தனி வட்டாட்சியர் சின்னதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.