சின்னாளபட்டி,ஜூலை 30- திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி யின் மாதாந்திர கூட்டம் ஜூலை 29 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், தெருவிளக்கு, சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் தங்கள் வார்டுகளில் செய்யப்படுவதில்லை எனவும், துப்புரவு பணிகள் மேற்கொள்வதில்லை எனவும், வாரம் ஒரு முறை மட்டுமே குடிதண்ணீர் வழங்குவதாகவும் அடுக்கடுக்கான புகார்களை தலைவர் போதும்பொண்ணுவிடம் தெரி வித்தனர். இதற்கு மனுவாக எழுதிக் கொடுத்தால் தீர்வு காணப் படும் என தலைவர் கூறினார். மேலும் பேரூராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் உள்பட செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள் எதுவும் தங்களுக்கு தெரிவிப்பதில்லை என கவுன்சிலர்கள் கூறினர். கவுன்சிலர்கள் புகார்களுக்கு தலைவர் போதும் பொண்ணுவின் கணவர் முரளி பதில் அளித்தார். இதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். தொடர்ந்து பேரூராட்சியின் நிர்வாக செயல்பாடு களில் பேரூராட்சித் தலைவரின் கணவரின் தலையீடுகள் அதிக ளவில் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். ஒட்டு மொத்தமாக கவுன்சிலர்கள் அனைவரும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்ததை அடுத்து செயல் அலுவலர் சிவக்குமார் எந்தவொரு பதிலும் கூறாமல் கூட்ட அரங்கை விட்டு பாதியில் எழுந்து சென்றார்.