எட்டு லாரிகள் பறிமுதல்
குழித்துறை, நவ.12- திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனரக வாக னங்கள் மூலம் அதிகமான கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளியன்று டாரஸ் லாரிகளில் கேரளாவிற்கு எம்.சாண்ட் மற்றும் பாறைக் கற்களை ஏற்றி வந்த எட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4,74,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நவ.15 முன்சிறை, நடைக்காவு பகுதிகளில் மின்தடை
களியக்காவிளை, நவ.12- குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் செவ்வாயன்று (நவ.15) காலை எட்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறி யாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திர விளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனி புரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை, சென்னித்தோட்டம், மாமூட்டுக்கடை, விரிகோடு மற்றும் கொல்லஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது. நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோன சேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.
தூத்துக்குடியில் நவ.15-இல் மின்தடை
தூத்துக்குடி, நவ.12- தூத்துக்குடியில் வருகிற 15-ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் வரும் 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை எட்டு மணி முதல் மால ஐந்து மணி வரை மாதாந்தி ரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, அழகாபுரி, மாதாநகர், செயின்ட் மேரிஸ் காலனி, கிருஷ்ண ராஜபுரம், முத்து கிருஷ்ணாபுரம், மேல அரசடி, கீழ அரசடி, வெள்ளபட்டி, தருவைகுளம், பட்டிணமருதூர், பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம் பூபால ராயர்புரம், லூர்தம்மாள்புரம், அலங்காரதட்டு, மாணிக்க புரம். குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்த ரையர் காலனி, வெற்றிவேல் புரம், முத்துகிருஷ்ணா புரம், ராமர் விளை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
வாக்காளர் அட்டை - ஆதார் இணைக்கும் பணி
தூத்துக்குடி, நவ.12- தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் இடமாற்றம், திருத்தம், நீக்கல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. முகாம்களை மாநக ராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.12, 13, 26 மற்றும் 27-ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நவ.12-ஆம் தேதி மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை வாக்குப்பதிவு அலுவலரும் மாநகராட்சி ஆணையரு மான சாருஸ்ரீ ஆய்வு செய்தார். ஆய்வின் போது தூத்துக்குடி வட்டாட்சியர், தேர்தல் பணி தொடர்பான துறை சார்ந்த அலுவலர்கள், களப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
திருச்செந்தூர் கோவில் வருவாய் ரூ.2.25 கோடி
தூத்துக்குடி, நவ.12- திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல்கள் கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டு வந்தது. எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், உண்டியல்களில் மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893-இருந்தது. மேலும் ஒரு கிலோ தங்கம் வெள்ளி 15 கிலோ, 234 வெளிநாட்டுப் பணமும் இருந்துள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
திருநெல்வேலி நவ.12- களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் தலையணையில் குளிக்க கடந்த 5-ஆம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இதற்கிடையே தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் ஆறு நாட்களுக்குப் பின்னர் தலையணையில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கருமாத்தூர் கிளாரெட் பள்ளியில் மாணவர் மனநல வாரம் கடைப்பிடிப்பு
மதுரை, நவ.12- மதுரை கருமாத்தூரி உள்ள புனித கிளாரெட் பள்ளியில் மாணவர் மன நல வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இது குறித்து பள்ளியின் தலைமை யாசிரியர் சூசைமாணிக்கம் கூறிய தாவது:- கொரோனா தொற்று காரண மாக மாணவர்கள் தொடர்ந்து செல் போனில் பேசுதல், வெவ்வேறு சமூக வலை தளங்களில் நேரம் செலவழித்து தங்களுடைய தூக்கத்தையும் , நிம்மதி யும் இழந்து தவறான பழக்க வழக்கங் கள், போதைப் பொருள் பயன்படுத்து தல், மது அருந்துதல் போன்றவற்றிற்கு அடிமைகளாகி மன அழுத்தம் , கோபம், விரக்தி, தாழ்வு மனப்பான்மை, படிப்பில் கவனமின்மை ஆகியவற் றால் இருப்பதைப் பார்க்க முடிந்தது. மாணவர்களின் மன நலன் கருதி “மாணவர் மனசு” என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு மனநல ஆலோ சனை வழங்க மன நல ஆலோசகர்க ளை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதனொரு பகுதியாக புனித கிளா ரெட் பள்ளியில் காமராசர் பல்கலைக் கழகத்திற்கு அருகில் இயங்கி வரும் சிக்கோப் மையத்தின் இயக்குநரும் மன நல ஆலோசகருமான ருடால்ப் தலைமையிலான எட்டு பேர் ஒரு வாரம் பள்ளி மாணவர்களுக்கு தனித் தனியாக அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய பிரச்சனைகளைக் கண்டறிந்து ஆலோசனைகள் வழங்கினர் என்றார்.
பாபநாசம் மலைப் பாதையில் ‘திடீர்’ மண்சரிவு
திருநெல்வேலி நவ 12- திருநெலவேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பர வலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் பாபநாசம் முண்டந்துறை மலைப்பாதையில் அகஸ்தியர் அருவிப் பாதைக்கு மேலாக-பாபநாசம் கீழணைக்கு செல்லும் வழியில் சாலையோரம் ‘திடீர்’ மண் சரிவு ஏற் பட்டது. அங்குள்ள தடுப்புச் சுவரும் இடிந்து விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதை யடுத்து சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டனர். இந்தச் சாலை வழியாகத்தான் சேர்வ லாறு அணை, காரையாறு சொரிமுத்து அய்யானார் கோவி லுக்குச் அனைவரும் சென்று வருகின்றனர். காணி குடியிருப்புவாசிகளும் இந்தப் பாதை வழியாகத்தான் சென்று வருகின்றனர். சாலையில் மண் அரிப்பு ஏற்படாத வாறு தடுப்புச்சுவர் அமைத்து சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவ.25-இல் அகில இந்தியத் துணைத் தொழிற் தேர்வு
தூத்துக்குடி, நவ.12- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் அகில இந்தியத் தொழிற்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வுகள் நடதப்பட உள்ளது. கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்கீழ் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய தொழிற்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் புதுதில்லி யைச் சேர்ந் டிஜிடி-யால் நடத்தப்பட்டு வருகிறது. கருத்தியல், பணிமனை கணித அறிவியல், வேலை வாய்ப்புத் திறன் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் பயிற்சியாளர்களுக்கு நவம்பர் 25-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பருவ முறையில் பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு துணைத் தேர்வு எழுத ஐந்து வாய்ப்புகள் கொடுக்கப் பட்டது. தற்போது கூடுதலாக ஒரு அரிய வாய்ப்பு அளிக்கப் படுகிறது. 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு துணைத் தேர்வு எழுத கூடுதலாக ஒரு வாய்ப்பும் வழங்கப் பட்டுள்ளது. எனவே மேற்கண்ட பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற் பயிற்சி நிலையங்களை நவம்பர் 13-ஆம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்மந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்ட ணத்தை தொழிற் பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி தேர்வில் பங்கேற்கலாம் மேலும், விவரங்களை http://skilltraining.tn.gov.in மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்க ளில் அறிந்து கொள்ளலாம்.
கொடுமுடியாறு அணையில் தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி, நவ. 12- திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே திருக் குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையில் கொடுமுடியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 52.50 அடி. திருக்குறுங்குடிப் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு, அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. சனிக்கிழமை காலை நிலவரப்படி அணையில் 49 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையில் இருந்து பிசான சாகு படிக்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு கொடுமுடி யாறு அணையிலிருந்து திறந்து வைத்தார். படலையார் கால்வாய், நம்பியாற்று கால்வாய், வள்ளியூரான் கால்வாய்களில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாவின் உள்ள 44 குளங்கள், 5,781 ஏக்கர் விளைநிலங்களும் பயன் பெறும். மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். நிகழ்வில் சேரன் மகாதேவி கூடுதல் ஆட்சியர முஹமது சபீர் ஆலம், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கிபாண்டி, கண்காணிப்புப் பொறியாளர் பத்மா, செயற்பொறியாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடியில் “மெட்ராஸ் ஐ” மாணவ, மாணவிகள் அவதி
தூத்துக்குடி, நவ.12- தூத்துக்குடியில் “மெட்ராஸ் ஐ” என்றழைக்கப்படும் கண் நோய் பரவி வருவதால் மாணவ, மாணவிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்த கண் நோய் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாகப் பரவுகிறது. கண்நோய் பரவலைத் தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்
தேனி,நவ. 12- பெரியகுளம் போடி குரங்கணி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 55 பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அண்ணாதுரை (49) என்பவரைக் கைது செய்தனர். அவர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்கிய ஆட்சியர்
திருநெல்வேலி, நவ.12- வீடற்றஏழைகளுக்கு குடிமனைபட்டா வழங்க வலியுறுத்தி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்கம் சார்பில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது இந்தப் போராட்டத்தில சுமார் 300 மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், பாப்பாக்குடி சேரன்மாதேவி திருநெல்வேலி, பாளை யங்கோட்டை நான்குனேரி பகுதிகளில் பயனாளிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டதோடு மனுக்களை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து வடக்குஅரியநாயகிபுரத்தில் நடை பெற்ற பட்டாவழங்கும் நிகழ்வில் சேரன்மாதேவி சார்-ஆட்சியர் முன்னிலையில் சுமார் 500 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாதர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் 50 பேருக்கும் பட்டா கிடைத்துள்ளது. இது மாதர சங்க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியென மாவட்டச் செயலாளர் பி.கற்பகம் தெரிவித்துள்ளார்.
ஓவியப் போட்டியில் சாதித்த மாணவர்கள்
விருதுநகர், நவ.12- விருதுநகரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒன்றாம் முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்க ளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. நேருவின் அரை உருவப்படம் என்ற தலைப்பில் மாணவர்கள் ஓவி யங்களை வரைந்தனர். இதில், கே.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் நவநீத் முதலிடம், சிவகாசி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தருண் இரண்டாமிடம், இராஜபாளையம் டி.ஏ.கே.எம். ராமம்மாள் ஆரம்பப்பள்ளி மாணவி ரக்ஷிகா மூன்றாமி டம் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அரிசி கடத்தல் தடுப்பு குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை
தேனி,நவ.12- தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க தமிழக -கேரள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது தமிழகம் சார்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுப்பிரமணி, தேனி மாவட்ட வழங்கல் அதிகாரி சாந்தி, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுப்புலட்சுமி, உத்தமபாளையம் வட்ட வழங்கல் அதிகாரி பாண்டி, போடி வட்ட வழங்கல் அதிகாரி ராமராஜ், கேரளா சார்பாக இடுக்கி ஏஎஸ்பி சுனீஷ்பாபு, கம்பம்மெட்டு காவல் ஆய்வாளர் லால்பாய், மனோஜ் மாத்யூ, உடும்பன்சோலை தாசில்தார் ராஜா, பீர்மேடு துணை தாசில்தார் ஜீவா, உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில அதிகா ரிகள் இணைந்து செயல்படுவது, அரிசி கடத்தல் குறித்து தகவல் கிடைத்தால் இரு மாநில போலீசாரும் பகிர்ந்து கொள்வது, குற்றவாளிகளை பிடிக்க இரு மாநில போலீ சாரும் ஒத்துழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
பெரியகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போதையில் ரகளை:வாலிபர் கைது
தேனி, நவ. 12- பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். வடுகபட்டி, வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் நிலம் வாங்கிய பிரச்னை குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மது போதையில் வந்த செல்வம் மகன் உதயக்குமார்(27), இந்த வழக்கு விசாரணை முடிவடையாமல் இருப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் தான் காரணம் என்று புகார் தெரிவித்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக சுற்றுச் சுவர் கதவை அடைத்தும், காவல்துறையினரிடம் வாக்கு வாதம் செய்தும் ரகளையில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெரியகுளம் காவல் துறையினர் உதயக்குமாரை கைது செய்தனர்.
கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை, நவ. 12- உதவி ஆசிரியர்களுக்கு ரூ . 25 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கவேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை அழகர் கோவில் சாலையிலுள்ள மதுரை காமராசர் பல்கலைக் கழகக் கல்லூரியில் வியா ழனன்று மூட்டா கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிளை தலைவர் கு.சுரேஷ் குமார் தலைமை வகித்தார். செயலாளர் முனைவர் ச.இராமசுந்தரம்.பொரு ளாளர் பேராசிரியர் ஏ. டி. செந்தாமரைக்கண்ணன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர், மண்டலம் - 1 தலைவர் பேரா. எஸ். இராமேஷ்ராஜ் ஆதரித்துப் பேசினார், துணைத் தலைவர் பி. ஆனந்தராஜ். கிளை பொருளாளர் சி. இராஜா உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
தேனியில் விடிய விடிய மழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
தேனி ,நவ.12- வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஆறுகள், அருவி களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கன மழை எச்சரிக்கையும் விடப்பட்டது. இடை விடாது பெய்து வரும் மழை காரண மாக வைகை ஆறு, முல்லைப்பெரி யாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் 69.55 அடியாக உள்ளது. அணைக்கு 1,012 கன அடி நீர் வந்தது.1,269 கன அடி நீர் திறக்கப்பட்டது. கன மழை அடுத்த இரண்டு நாட்களுக்கும் தொடரும். இதனால் எந்த நேரமும் வைகை அணை யின் நீர்மட்டம் 70 அடியை எட்டும் என்ப தால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மதகு, கரைகளைக் கண்காணித்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.85 அடியாக உள்ளது. 816 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வந்த நிலையில் 40 கன அடி நீர் திறக்கப் பட்டது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.48 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வந்தது. 30 கன அடி நீர் திறக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குரங்கணி வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழையளவு ; தேக்கடி 0.4, கூடலூர் 7.4, உத்தம பாளையம் 1.2, போடி 36.8, வைகை அணை 18.6, மஞ்சளாறு 35, சோத்துப் பாறை 10, பெரியகுளம் 31, வீர பாண்டி 48.8, அரண்மனைபுதூர் 43.6, ஆண்டிபட்டி 27.2, சண்முகநாதி அணை 28.6 மி.மீ. மழை அளவு பதி வாகி உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
திருநெல்வேலி, நவ. 12- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15-ஆம் தேதி நடக்கிறது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வேலைவாய்ப்பு மையம் சார்பில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், பல்கலை. வளாகத்தில் வருகிற 15-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் நடக்கிறது. இதில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட் டங்களில் வசிக்கும் 2021 மற்றும் 2022-ம் ஆண்டு இளங்கலைப் பட்டம் (பி.காம், பி.ஏ., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.எம்.எஸ், பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம்/ கணினி அறிவியல்/ பொது) பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். கலை அறிவியல் மற்றும் வணிகம் சார்ந்த இளங் கலைப் பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் அனைவரும் டாடா நிறுவனத்தில் கணினி சேவைகள், வணிக தீர்வுகள் மற்றும் ஆலோசனை சார்ந்த பிரிவுகளில் பணி அமர்த்தப்படுவார்கள். நேர்காணலில் கலந்து கொள்ள விருப்ப உள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் (https://www.msuniv.ac.in/) தங்கள் சுயவிவர குறிப்பு தகவலைப் பதிவு செய்ய வேண்டும். நேர்காணலுக்கு வரும்போது சுயவிவரக்குறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு 0462-2563213, 2563437 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.