மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. சனிக்கிழமை காலை பத்து மணி முதல் விடாமல் லேசான மழை பெய்தது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 1959-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பின் தற்போது வரை தூர்வாரப்படவில்லை. அணையின் மொத்த உயரம் 71 அடி. இதன் கொள்ளளவு 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடியாகும். ஆனால், அணையில் ஆங்காங்கே மணல் மற்றும் மண் திட்டு காணப் படுவதால் முழுமையான கொள்ளளவுக்குத் தண்ணீர் தேக்க முடியவில்லை. அதனால், தற்போது இந்த அணையின் மூலம் தேனி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு போதிய நீர் கிடைக்கவில்லை. வைகை அணை திறக்கப்பட்ட பிறகு, 1977 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று மதுரை வைகையாற்றில் விழுந்தது. அதற்குப் பின்னர் மதுரை ஒரு பேரழிவைச் சந்தித்தது 1993-ஆம் ஆண்டு தான். 1993 டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 வரை பெய்த மழை, புயலால் வைகையில் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப் பட்டது. அதே நேரத்தில், சிறுமலை மலைப்பகுதியில் பெய்த கனமழையால், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள அணைகளின் உபரி நீர் மற்றும் காட்டாற்று ஓடைகளில் வரும் நீரைத் தேக்கும் சிறு அணையான சாத்தையார் அணையும் நிரம்பி வழிந்தது. அதிகமான தண்ணீர் தொடர்ந்து வந்ததால் செல்லூர் கண்மாய் நிரம்பியது மட்டுமல்லாமல் உடைந்தது. அன்றைக்கு மதுரை மாநகரின் வட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
வைகை அணை தூர்வாரப்பட்டால் 868 மில்லியன் கனஅடி கூடுதல் தண்ணீரைத் தேக்க முடியும். ஆரம்பத்தில் ரூ.244 கோடியில் வைகை அணையை தூர்வாரும் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற்கான ஆய்வுகள் நடந்து வந்த நிலையில் நிதிப் பற்றாக்குறையால் அந்தத் திட்டத்துக்கு கடந்த அரசு ஒப்புதல் வழங்கவில்லை. வைகை தண்ணீரை நம்பியுள்ள பாசன விவசாயிகள் கூறுகையில், ``ஐந்து மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது வைகை அணைதான். அணையில் உள்ள மணலை எடுத்து, அணையைத் தூர்வார வேண்டும் என ஐந்து மாவட்ட மக்களும் விவசாயிகளும் பல முறை கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால், இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நினைத்தால் ஒரு முழுமையான அறிக்கையைச் அரசுக்கு அனுப்பி அணையைத் தூர்வார முடியும். 2023-ஆம் ஆண்டிற்குள்ளாவது அணையைத் தூர்வார வேண்டுமென்றனர். 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி கணக்குப்படி மதுரையில் 46 நீர்நிலைகள் இருந்துள்ளன. அவற்றில் ஏழு மட்டுமே இப்போது “உயிருடன் உள்ளன”. பல பயன்பாட்டில் இல்லை அல்லது கழிவுநீரை வெளியேற்றப் பயன்படுத்தப்படுகின்றன. பதினாறு நீர்நிலைகள் கட்டடங்களால் நிரப்பப்பட்டுள்ளன.
மதுரையைச் சுற்றியுள்ள கண்மாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி பாதி அளவுக்குச் சுருங்கிவிட்டன. இதனால் கண்மாய்களில் முழு அளவு தண்ணீர் தேக்க முடியாமல் மறுகால்பாயத் தொடங்கி விடும். அதே போல் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படாமலும் ஆக்கிரமிப்பில் உள்ளதாலும் பல இடங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் புகுவதுதான் வாடிக்கை. வைகையின் வெள்ளத்தைக் குறைக்கும் 30-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் அழிந்து விட்ட நிலையில் வைகையில் வெள்ளம் வந்தால் நீர் பிடிப்புத் திறனற்ற கண்மாய்களும், ஏரிகளும் மக்கள் மீது கோபத்தைக் காண்பிக்கும். மதுரையைச் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் இருந்ததாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. வில்லாபுரம், அவனியாபுரம் கண்மாய்கள் வீடுகளாக அரசுக்கு வருமானம் பெற்றுத்தரும் வகையில் மாற்றப்பட்டுவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூட உலகநேரி கண்மாயில் தான் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாத தரவுகளின்படி மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டாரத்தில்-270, சேடபட்டி வட்டாரத்தில்-223, தே.கல்லுப்பட்டி-335. செல்லம்பட்டி-142, அலங்காநல்லூர்-184, உசிலம்பட்டி-130, வாடிப்பட்டி-79, கொட்டாம்பட்டி-846, மேலூர்-407, மேற்கு-87, கிழக்கு-103 என ஊரணிகள், குளங்கள் மொத்தம் 2,806 உள்ளதாகத் தகவல்கள் உள்ளன. திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளையும் சேர்த்தால் ஒட்டு மொத்தத்தில் மதுரையில் 3,000 குளங்கள், ஊரணிகள் உள்ளதாக வைத்துக்கொள்ளலாம்.
மதுரையின் எதிர்கால குடிநீர்த் தேவையை 2018-ஆம் ஆண்டு மதிப்பீடு செய்த மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு (CPHEEO), “மதுரையில் 2034-ஆம் ஆண்டு நகரின் மக்கள்தொகை சுமார் 19.23 லட்சமாக இருக்கும். 2049-ஆம் ஆண்டு நகரின் மக்கள்தொகை சுமார் 22.77 லட்சமாக இருக்கும். 2034-ஆம் ஆண்டு மதுரை நகருக்கு தினசரி 317 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படும். 2049-ஆம் ஆண்டு மதுரை நகருக்கு தினசரி 374 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால பற்றாக்குறை நாளொன்றுக்கு 125 மில்லியன் லிட்டர் அதாவது ஆண்டுக்கு சுமார் 1630 மில்லியன் கனஅடி நீர் தேவைப்படும். மழை-வெள்ளத்தால் மதுரை துயர நிலையை சந்திக்கக்கூடாது. 3 ஆயிரம் குளங்கள், ஊரணிகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் வரை ஆய்வு செய்து தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தொடங்குவார்கள் என நம்பலாம்.