கோவி.பால.முருகு
ஐந்து எருதுகள் காட்டிலே
அன்பாய் சேர்ந்து மேய்ந்தன
வந்து பார்த்த சிங்கத்தின்
வாயில் எச்சில் ஊறிற்று
முந்திக் கால்கள் ஊன்றியே
முரட்டுத் தனமாய்ப் பாய்ந்தது
ஐந்து எருதுவும் கூடியே
அலறி ஓட வைத்தன!
சோர்ந்து போன சிங்கமோ
சூழ்ச்சி வலையைப் பின்னவே
நரியின் உதவி தன்னையே
நாடி அதனிடம் சென்றது.
“நரியே சூழ்ச்சி செய்துநீ
நட்பைப் பிரிப்பாய் பசுவிடம்
உரிய நேரம் நானுமே
ஒன்று ஒன்றாய்க் கொல்லுவேன்”!
நரியும் எருதை நாடியே
நட்பைப் பிரிக்கும் சூழ்ச்சியில்
விரியும் பொய்யைக் கூறியே
விரிசல் விழவேச் செய்தது
பிரிந்து மேய்ந்த எருதினைப்
பெரிய சிங்கம் கொன்றது
நரியும் சிங்கமும் கூடியே
நன்றாய் உண்டு மகிழ்ந்தன.
இறந்த எருதை எண்ணியே
ஏக்கம் கொண்ட எருதுகள்
உறவாய் ஒன்று சேர்ந்தன
ஊக்கம் மிகவும் கொண்டன
பிறகும் வந்த சிங்கத்தைப்
பிடரியில் முட்டித் துரத்தின
உறவாய் ஒன்று கூடினால்
உயிரை வாழ்வைக் காக்கலாம்!
பிரித்து ஆளும் சூழ்ச்சியால்
பெரிய அரசும் வீழ்ந்திட
நரியைப் போல சூழ்ச்சியை
நாளும் கொள்ளும் மதவெறி
புரிந்து கொண்டால் பிழைக்கலாம்
புத்தியில் நன்றாய் உறைக்கணும்
சரிந்து போகும் ஆட்சிகள்
சரியா வண்ணம் காக்கலாம்!