அரியலூர், டிச.15- இந்திய தேர்தல் ஆணையம் உதயமான தினத்தை நாடு முழுவதும் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் நாள் “தேசிய வாக்காளர் தினம்” கொண்டாடவிருக்கும் நிலையில், அரியலூர் மாவட்டத்தில் 12-வது தேசிய வாக்காளர் தினம் 25.1.2022 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவியப்போட்டி, சுவரொட்டி வடிவமைப்பு (poster making), தேர்தல் குறித்த ஒரு வரியிலான சுலோகம் (தமிழில்), பாட்டுப்போட்டி, குழு நடனம், கட்டுரைப்போட்டி போன்ற போட்டிகளை அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தி மாணவ, மாணவியர்களை தேர்வு செய்திட சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட போட்டிகளில் பங்குபெற ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் கல்லூரி முதல்வரிடமும், பெயர்களை முன்பதிவு செய்து போட்டிகளில் பங்குகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குபெற இயலாத மாணவ, மாணவியர்கள் மற்றும் 18 வயது-அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து வாக்காளர்களையும் கட்டுரை போட்டியில் பங்குபெறச் செய்யும் விதமாக, இந்திய தேர்தல் ஆணைய அலுவலக இணையதள முகவரியான www.elections.tn.gov.in.in இல் “SVEEP contest-2022” என்ற தலைப்பை தேர்வு செய்து,“What I want to contribute as a Voter” என்ற தலைப்பின் கீழ் ஆங்கில மொழியில் கட்டுரை அல்லது “ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு” என்ற தலைப்பின் கீழ் தமிழ் மொழியில் கட்டுரையினை, ஒரு பக்கம் அல்லது 200 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்குமாறு தயார் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின்படி தயார் செய்யலாம். தயார் செய்த கட்டுரைகளை மேற்படி இணையதள முகவரியில் 31.12.2021-க்குள் சமர்ப்பித்து, போட்டியில் பங்குபெறலாம். இந்நாளிற்கு பிறகு வரும் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.