districts

சாம்பிராணிபட்டியில் ஆக்கிரமிப்பு 4 ஏக்கர் பூமிதான நிலத்தை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 18-  2 கோடி சொத்து உள்ளவர் எப்படி பூமிதான நிலங்களை வைத்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை , சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து 4 ஏக்கர் பூமிதான நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த அய்யணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சாம்பிராணிபட்டி கிராமத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு பூமிதான நிலங்கள் வழங்கப்பட்டன. இதில் 4.18 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் கார்மேகம் ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அந்த நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்த மனுவை நீதிபதிகள் பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் சனிக்கிழமையன்று விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கூறும்போது, ஆக்கிரமித்துள்ள கோபாலகிருஷ்ணன் என்பவர் தேர்தலில் போட்டியிடும் போது தனக்கு 2 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக கூறியுள்ளார். இரண்டு கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளவர் பூமிதான நிலத்தை வைத்திருக்க முடியாது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றார். கோபாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, சம்பந்தப்பட்ட நிலம் எங்கள் தந்தைக்கு பூமி தானமாக வழங்கப்பட்டது. அந்த நிலத்தை நாங்கள் விவசாயம் செய்து முன்னேற்றம் வந்துள்ளோம் என கூறப்பட்டது.  இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் கார்மேகம் 2 கோடிக்கு சொத்து உள்ளது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். எனவே இவர்கள் இந்த இடத்தை வைத்திருப்பது சட்ட விரோதம் .ஆகையால் பூமிதான நிலத்தில் இருவரது ஆக்கிரமிப்புகளை மூன்று மாதத்துக்குள் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.