districts

img

எதிர்கால இந்திய கால்பந்து களத்தில் சீறிப்பாயப் போகும் தமிழன்!

த.கண்மணி
இன்றைய கால்பந்து களத்தை ஆக்கிரமித்து ஆளும் இளம் தமிழன். பிரபல கால்பந்து வீரர் ராமன்விஜயனால் வெளியில் கொண்டுவரப்பட்டவர். சுனில் சேத்ரி கண்ட சூப்பர் ஸ்டார். இன்றைய சமூக வலை தளங்களில் அதிகம் பலரால் பாராட்டிப் பேசப் படும் இளைஞர் சிவசக்தி தமிழக கால்பந்து வீரர். சிவசக்தி ஒரு சராசரி நடுத்தர எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் தன் பள்ளி பருவத்திலிருந்தே கால் பந்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரது கால்பந்து பயணம் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுதே தொடங்கிவிட்டது. காரைக் குடிக்கு அருகில் உள்ள கண்ணூர் இவரது சொந்த ஊர். அங்கு அதிகமான இளைஞர்கள் ஆர்வத்தோடு விளையாடும் விளையாட்டு கால்பந்து. அதே ஆர்வத்தோடு விளையாடி இன்று இந்திய அளவிலான கால்பந்து தொடர்களில் சிறந்து விளங்குகிறார் சிவசக்தி. சிவசக்திக்கு கால்பந்து மீது இருந்த ஆர்வத்தை உணர்ந்த பெற்றோர், அவரது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி அவரை ஊக்குவித்துள்ளனர். பிறகு சிவ சக்திக்கு இராமன்விஜயன், இராமன் பிரகாஷ் ஆகியோரால் நடத்தப்படும் “நோபல் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அங்கு சென்று பயிற்சியும் பெற்றுள்ளார். அதுமட்டு மின்றி அங்கு பயிற்சி பெரும் நாட்களில் பல்வேறு ஊர்களில் நடக்கும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார் சிவசக்தி. எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே தனது தந்தையை இழந்துவிட்டார் சிவசக்தி. குடும்பத்தையே வறுமை வாட்டியது. இதுபற்றி சிவசக்தி “அப்பா இல்லாத ஒரு வாழ்க்கை ரொம்ப கஷ்டம். அதுவும் சின்னவயசுல நம்ம தேவைகள கூட யார்கிட்டயும் போய் கேக்க முடியாது. அப்பா போனவுடனே என் அம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. என்னையும் என்னோட அண்ணனையும் தனியாளா வேல செஞ்சு எங்கள ரொம்ப கஷ்டப்பட்டு காப்பத்து னாங்க” என்கிறார். 

22 கோல்கள்
அதுமட்டுமில்லாமல், “எனக்கு இராமன் சார் நிறைய உதவி பண்ணீருக்காங்க. நான் இன்னிக்கு இந்த இடத்துல இருக்குறதுக்கு இராமன் விஜயன் சாரும்,  இராமன் பிரகாஷ் சாரும் தான் காரணம்” என்கிறார் சிவசக்தி. மேலும் சில நாட்களுக்கு பிறகு சிவசக்தி இராமன் விஜயனால் நடத்தப்பட்டுவரும் “இராமன் விஜயன் சாக்கர் பள்ளியில் (RVSS)” பயிற்சி பெற்று மேலும் பல பிரபலமான கால் பந்து போட்டிகளில் கலந்துகொண்டு தன்னை வெளிப்படுத்தியுள்ளார். சிவசக்தி தனது அணி ஆர்விஎஸ்எஸ்–க்காக அடித்த கோல்கள் அவரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. சிவசக்தி 2018 ஆம் ஆண்டு “ரிலையன்ஸ் அறக் கட்டளை யூத் ஸ்போர்ட்ஸ்” (RFYS) நடத்திய கால்பந்து விளையாட்டில் சென்னையில் அதிக அளவில் ஒன்பது கோல்களை அடித்து “கோல் டன் பூட்” வென்றுள்ளார். மேலும் சென்னை யில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த 18 வயதிற்குட்பட்டோருக்கான “எலைட் லீக்கில்” இந்தியாவிலேயே அதிக அளவில் 22 கோல்களை அடித்து “டாப் கோல் ஸ்கோர” என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். ஒரு பதினெட்டு வயது இளைஞர் அனைத் திந்திய கால்பந்து கூட்டமைப்பு(AIFF), எலைட் லீக், ரிலையன்ஸ் அறக்கட்டளை யூத் ஸ்போர்ட்ஸ்(RFYS) ஆகியவற்றில் தனது செயல்பாட்டிற்காக பலரின் சிறந்த விமர்சனங்களை பெற்றுக்கொண்டிருக்கும் பொழுது “பெங்களூர் எப்.சி” அணியில் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிறகு சிவசக்தி பி.எப்.சி அணியில் இணைந்துவிட்டார். சிவசக்தியிடம் பி.எப்.சி பற்றி கேட்ட பொழுது, “இதல்லாம் எனக்கு ஒரு கனவு மாதிரி இருக்கு அதுமட்டும் இல்ல, இந்தியாவுல உள்ள டாப் பிலேயர்ஸ் எல்லாரும் பெங்களூர் எப்.சி.ல தான் இருக்காங்க. டாப் இந்தியன் பிளேயர் சுனில் சேத்ரி. அவரோட ரசிகன் நா.  இன்னிக்கு அவருகூடையே சேர்ந்து விளையாடு றது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்புறம் ரித்திக் சிங், உதாந்தா, ஜந்தர் சிங், இராய் கிருஷ்ணா எல்லாருமே டாப்பான இந்தியன் பிளேயர்ஸ். இவங்கல்லாம் இருக்கிற இடத்துல நானும் இருக்கேன்றதே ஒரு பெருமை தான் எனக்கு. நான் தினம் தினம் அவங்ககிட்ட இருந்து நிறைய விசயங்கள கத்துக்குறேன் என்றார்” அதுமட்டுமில்லாமல் சிவசக்தி “எங்களுக்கு வந்த கொஞ்ச நாட்கள் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா இப்போ  இந்த ஊரும் எனக்கு ரொம்பவே பழகீருச்சு. இங்க நிறைய பேரு என்னைய அவங்க வீட்டு புள்ள மாதிரி பாக்குறாங்க. அது எனக்கு ரொம்பவே சந்தோசமா இருக்கு” என்கிறார்.

தமிழக அணி வளர
சிவசக்தியிடம் நமது தமிழ்நாடு கால்பந்து அணியின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் உதவும் கருத்துகளை கேட்ட பொழுது: “நம்ம தமிழ்நாட்ல நிறைய திறமையான கால்பந்து வீரர்கள் இருக்காங்க ஆனால் எனக்கு தெரிஞ்சு அதிகபட்சம் திறமையான பிளேயர்ஸ் தேர்வு செய்யப்படுகிறதில்ல. வாரிசுகளின் அடிப்படையில் தான் நிறைய பேற எடுக்குறாங்க என்ற இவர் “இதுபோன்றெல்லாம் இல்லாமல் ஒருவரின் திறமைக்கு மதிப்பு கொடுத்தால் தமிழ்நாட்டில் இருக்கும் நல்ல கால்பந்து வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்.  அதுமட்டுமல்லாது “சென்னை லீக்” நடக்காததை சுட்டிக்காட்டிய சிவசக்தி, “அது சில காரணங்களால் நடக்காமல் இருப்பது பல தமிழ்நாடு கால்பந்து வீரர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்குவது மட்டுமல்லாமல், அவர்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளுக்கு சென்று தங்களின் கால்பந்து கனவையும், வாழ்வையும் முறியடித்துகொள் கிறார்கள். எனவே எந்த பிரச்சனையும் இல்லாமல் தமிழ்நாடு கால்பந்து சங்கம் நல்லபடியா தேர்ந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்தால் நம்ம தமிழ்நாட்டு அணி எல்லா விதத்திலும் முன்னிலை வகித்து சிறந்து விளங்கும்” என்கிறார்.

டுராண்ட் கோப்பை
இந்திய அளவிலான சிறந்த வீரர்கள் இருந்த அந்த அணியில் அவர்களுடன் ஈடுகொடுத்து பெங்களூர் அணிக்காக ஐந்து கோல்களை அடித்துள்ளார் சிவசக்தி. அன்றைய தொடரில் பெங்களூர் அணிக்காக அதிக அளவில் கோல் அடித்தவரும் அவரே. சிவசக்தி “நான் என்னோட டீமும் என்னோட கோச்சும் என்மேல நிறைய நம்பிக்கை வச்சுருந்தாங்க அத காப்பாத்தனும்னு நினச்சு விளையாண்டேன். அவ்ளோதான். இறுதியா பெங்களூர் அணி ஜெயிச்சது ரொம்பவே எனக்கு சந்தோசமா இருந்துச்சு” என்றார்.

எதிர்கால கனவுகள்
சிவசக்தியிடம் அவரின் எதிர்கால கனவுகள் பற்றி கேட்ட பொழுது “எனக்கு நம்ம இந்திய அணிக்காக விளையாடனும், நம்ம தமிழ்நாட்டுக்கு நிறைய பெருமைகள சேக்கணும், அப்புறம் நிறைய கோல்கள் அடிக்கணும் சுனில் சேத்ரி அளவுக்கு அடிக்கணும் ஏன்னா நம்ம இந்தியால யாரும் இன்னும் சுனில்சேத்ரி அளவுக்கு கோல் அடிச்சதுல்ல, ஐஎஸ்எல் ISL மேட்ச்ல சென்ட்டர் ஸ்ட்ரைக்ல யாருமே இந்தியன் பிலேயர்ஸ் விளையாடுறது இல்ல. வெளிநாட்டு பிளேயர்ஸ் தான் விளையாடுறாங்க முதல் இந்தியன் பிளேயர் ஸ்ட்ரைக்கரா நான் விளையாடனும்னு ஆசை என்றார். கடைசியா “இது என்னோட கனவு மட்டும் இல்ல என் அம்மாவோட கனவும் கூட. எங்களுக்குன்னு சொந்தமா ஒரு வீடு கட்டணும்னு ஆசை. ஒவ்வொரு நாளும் நினப்பேன், நம்ம எப்போ ஒரு வீடு கட்டப்போறோம்னு. அது என்னோட ஒரு நெடுங்கால கனவாவே இருக்கு”. என்கிறார் கால்பந்து வீரர் சிவசக்தி.