திண்டுக்கல், ஜன.19- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நன்னீர் மீன் வளர்ப்புத்திட்டத்தை ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கர பாணி துவக்கி வைத்தர். திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் சண்முகாநதி ஆற்றில் கல்துறை தடுப்பணையில் நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி பங்கேற்று நாட்டின மீன் குஞ்சுகளை ஆற்றில் இருப்பு செய்தார். இவ்விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-2022 இன் கீழ் ஆறுகளில் நாட்டின நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை தமிழ்நாட்டில் செயல்படுத்திட ஏதுவாக மொத்தம் ரூ.1.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயினை கணிசமாக அதிகரித்திட வேண்டுமென்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய பெருங் கெண்டை மீன்குஞ்சுகளான ரோகு மற்றும் மிர்கால் இருப்பு செய்வதால் இவற்றின் பிழைப்புத் திறன் அதிகரித்திடும். இத்திட்டத்தின் கீழ் பழனி தாலுகா சண்முகாநதி ஆற்றில் கல்துறை தடுப்ப ணையில் 0.60 இலட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டியில் உள்ள வைகை ஆற்றில் 0.34 இலட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்படவுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 0.94 இலட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படவுள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் நாட்டின மீன்களின் இருப்பு அதிகரித்து உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.