திருவில்லிபுத்தூர், அக்.30- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ரைட்டன் பட்டி தெருவில் வசிப்பவர் சீனிவாசன். சமூக ஆர்வலரான இவர் செண்பகத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள காட்டழகர், பேச்சியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் தலா ரூ. 20 வசூலிக்கப்படுவதாகவும் இதனை தடுக்கக் கோரியும் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அனுப்பினார். அந்த மனுவிற்கு திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன பாதுகாப்பு துணை இயக்குனர் திலீப் குமார் விளக்கம் தந்துள்ளார். அந்த விளக்கத்தில் ,செண்பகத் தோப்பு பகுதிகளில் கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் வனத்துறையினர் வசூலிக்கவில்லை என்றும் சுற்றுச்சூழல் சமூக மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த மலைவாழ் மக்கள் வசூல் செய்வதாகவும் கூறியுள்ளார். மலைவாழ் மக்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள் பல்வேறு அமைப்புகள் சேர்ந்தவர்கள் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பு சேர்ந்தவர்கள் பக்தர்களிடம் நிதி வசூல் பண்ணுவது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர், பணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பணம் வசூலிக்க யார் அதிகாரம் கொடுத்துள்ளனர் என்று பொது மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் மாவட்ட ஆட்சியரும் , திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனரும் பதில் தர உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது
.வழக்கு நிலுவையில் உள்ள போது மக்களிடம் வசூல் பண்ணுவது நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பணம் வசூல் பண்ணுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் சீனிவாசன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய தனது புகார் மனுவில் கூறியுள்ளார். மலைவாழ் மக்கள் வசூலிக்கவில்லை இது சம்பந்தமாக பொதுமக்கள் சிலரிடம் கேட்டபோது பக்தர்களிடம் வசூல் பண்ணுவது புதுமையாக உள்ளது., தற்சமயம் பக்தர்களிடம் பணம் வசூல் பண்ணுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது, மேலும் இந்த செயல் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். காப்பக துணை இயக்குனர் கூறுவது போல் மலைவாழ் மக்கள் யாரும் கட்டண வசூலில் ஈடுபடவில்லை. அவர்களுக்கு அனுமதியும் தரவில்லை நேரடியாக வனத்துறை அலுவலர்களே சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழகம் என்ற பெயரில் வசூல் செய்கிறார்கள் என்று செண்பகத் தோப்பு செல்கின்ற பொதுமக்கள் கூறுகிறார்கள். செண்பகத்தோப்பு செல்லும் பொது மக்களிடம் வழங்கப்படுகின்ற ரசீதில் தமிழக அரசு சின்னம் இல்லை. வனத்துறை பெயரும் இல்லை. ஆனால் வனத்துறையினர் வசூல் செய்கிறார்கள் . வசூலில் வரக்கூடிய தொகை அரசாங்கத்திற்கு செல்கிறதா அல்லது தனி நபருக்கு செல்கிறதா என்று பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.