சென்னை, ஜூலை 16 - இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளியில் சுமார் 6 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் ஜூலை 14, 15 தேதிகளில் பதவி உயர்வு க்கான கலந்தாய்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், கலந்தாய்விற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.