அரியலூர், பிப்.19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு ரோட்டில் வசித்து வருபவர் ராணி லெட்சுமணன். இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் ஆலயத்தில் இருந்து 100 மீட்டரில் எந்த ஒரு கட்டிடத்தை மாற்றி அமைக்கவோ அல்லது கட்டவோ கூடாது என்பது இந்திய தொல்லியல் துறையின் உத்தரவாகும். அவ்வாறு மாற்றம் செய்தால் தொல்லியல் துறையிடம் உரிய அனுமதி பெற்று மாற்ற வேண்டும். ஆனால் எந்த அனுமதியும் இல்லாமல், கோவிலில் இருந்து 78 அடியில் உள்ள ராணியின் இடத்தில் கட்டிடம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது. இதனையடுத்து செந்தில் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி கட்டிடத்திற்கு தடை விதித்தார். ஆனால் அதை மீறி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டதன் அடிப்படையில் நீதிபதிகள், வெள்ளிக்கிழமைக்குள் கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வியாழனன்று மதியம் கட்டிடத்தை இடிக்க ஆட்சியர் ரமணசரஸ்வதி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆனால், கட்டிடம் இரவு வரை இடிக்காமல் இருப்பதை அறித்த மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உடனடியாக அரியலூரில் இருந்து புறப்பட்டு இரவு 2 மணி வரை கட்டிடத்தை இடிக்கும் பணியை முன்னின்று செய்து முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார்.