மதுரை, ஜூலை 21- இடஒதுக்கீடு, முன்னுரிமை போன்றவை குறித்து முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி முன்பாக சமர்ப்பிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண்களில் எனக்கான பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பின் தற்காலிக ஆசிரியர் தேர்வுக்கு பல வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அதில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. ஆகவே, தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக வியாழனன்று நடைபெற்றது. அப்போது அரசுத்தரப்பில், “மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட மாவட்டங்களில் நடவடிக்கை தொடங்கவில்லை. சென்னை உயர்நீதிமன்ற வரம்பிற்குட்பட்ட மாவட்டங்களில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், “ இந்த வழக்கை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பும், மதுரைக்கிளையின் தீர்ப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளது. ஆகவே, இது குறித்து முடிவெடுக்க இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக சமர்ப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தார்.