districts

மதுரை முக்கிய செய்திகள்

வாகனங்களுக்கான வரிகளை ரத்து  செய்ய கோரி சிஐடியு மனு

இராமநாதபுரம், நவ.24- வாகனங்களுக்கு கடுமையாக உயர்த்தப்பட்ட வரிகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (நவ.24) சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.  இதன்படி, இராமநாதபுரம் மாவட்ட சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை சந்தித்து மனு கொடுக்கப் பட்டது. நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.ஆனந்த், தலைவர் எம்.மணிக்கண்ணு, மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் நாகேந்திரன் உட்பட கலந்து கொண்டனர்.மனுவை பெற்றுக் கொண்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பு வதாக கூறினார்.

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இராமநாதபுரம், நவ.24- இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட விவசாயத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  தற்போது வைகை அணையில் இருந்து வரும் தண்ணீர் மதுரை மாவட்டம் எல்லையை வந்தடைந்துள்ளது. இது சனிக்கிழமையன்று இரவு இராமநாதபுரம் மாவட்ட எல்லை பார்த்திபனூர் மதகணை வந்து அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே, வைகை ஆற்றின் கரையோரம் உள்ள  பொதுமக்கள் பாதுகாப்பாகவும் தங்களது கால்நடைக ளை கவனமாக பார்த்து கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

உலகப் பாரம்பரிய வார விழா  சிவகங்கை மன்னர் பள்ளியில் தொன்மைப் பொருள்கள் கண்காட்சி

சிவகங்கை, நவ.24- சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு தொன்மைப் பொருள்கள் கண்காட்சி மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவரும் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான சுந்தரராஜன் தலைமை வகித்தார். சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் காளீஸ்வரன்  வரவேற்றார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா, சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி, தொல்நடைக் குழு வழிகாட்டி  நல்லாசிரியர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கண்காட்சியை சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஜெயமணி தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், சிவகங்கை மகளிர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனீஸ்வரன், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மேனாள் முதல்வர் வள்ளி, பள்ளி ஆய்வாளர் இராதா கிருஷ்ணன், சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் வித்தியா கணபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிவகங்கை தொல்நடைக் குழு செயலாளர் இரா.நரசிம்மன் நன்றி கூறினார். கண்காட்சியில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர், மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் கிடைத்த 600-க்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சீட்டு கம்பெனி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி எஸ்.பி.,யிடம் மனு

விருதுநகர், நவ.24- சீட்டுக் கம்பெனி நடத்தி பலரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்து விட்டு பணத்தை திரும்ப வழங்காத வர்களை கைது செய்ய வேண்டுமென பொது மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ளது தளவாய்புரம். இங்கு, எஸ்.கே.டி, பிகேடி செல்வம் சிட்பண்ட் நிறுவனத்தை சிலர் நடத்தி வந்துள்ள னர். இவர்கள், பொதுமக்களிடம் ஒரு லட்சம் முதல் பல லட்சங்கள் வரை பெற்றுள்ளனர். பணத்தை வாங்கிய தற்கு புரோ நோட்டில் மட்டும் கையெழுத்திட்டு வழங்கி யுள்ளனர். இந்நிலையில், திடீரென யாருக்கும் பணத்தை வழங்கவில்லை. இதனால், பணத்தை வழங்கியவர்கள் காவல் நிலையத்திலும், பொருளாதார குற்றப் பிரிவிலும் புகார் மனுக்கள் வழங்கியுள்ளனர். நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை விற்று பணத்தை திரும்பத் தருவதாக சிட்பண்ட் நிர்வாகிகள் தெரி வித்தனர். ஆனால், வழங்கவில்லை. எனவே, மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பணத்தை மீட்டுத் தரக்கோரி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாளிடம் புகார் மனு அளித்தனர்.