திருச்சி, ஜன. 13- விலையில் சரிவு, கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக வாழை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. போதுமான விலை கிடைக்கும் என்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது. பொதுவாக பொங்கல் பண்டிகையையொட்டி வாழைப்பழங்கள், வாழை இலை இவற்றின் விலை அதிகரிக்கும். கடந்த வாரம் சற்று அதிகரித்த வாழைப் பழங்களின் விலை தற்போது குறைந்து விட்டது. பாரம்பரிய ரகமான பூவன் விலை கடந்த வாரம் கிலோ ரூ.18-19 ஆக இருந்தது. ஜனவரி 12-ஆம் தேதி நிலவரப்படி விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரையே விற்பனையாகின. கிலோ ரூ.20-வரை விற்கவாய்ப்புள்ளது என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது என்கிறார் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த தமிழ்நாடு வாழை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கப் பொருளாளர் மணிக்குட்டி ஏ.சுப்பிரமணியன். கொரோனா பரவலால் கோவில்களை மூடுவதும் இதற்குக் காரணம்.
தற்போதைய சபரிமலை கோவில் சீசனில் கூட வாழைப்பழத்திற்கு விலை கிடைக்கவில்லை. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் காவிரிப் பாசனத்தை நம்பி கரும்பு பயிரிடும் விவசாயிகள் வாழை விவசாயத்திற்கு மாறி விட்டனர். உற்பத்தி அதிகரித்துள்ளது. தேவை குறைந்து விட்டதும் காரணம் என்றார் சுப்பிரமணியன். திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் ஒழுங்குமுறைச் சந்தையில் வாழைத்தாரின் சராசரி விலை ரூ.130 ஆகவும், அதிகபட்சமாக ரூ.400 ஆகவும் இருந்தது. வேளாண்விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் திருச்சிராப் பள்ளி ஒழுங்குமுறை சந்தையில் சுமார் 50 டன் வாழைப்பழம் விற்பனையானது. திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட்டில் உள்ள மொத்த வாழைத்தார் சந்தையில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
சிறந்த ரகமான ‘செவ்வாழை’ மற்றும் ‘ரஸ்தாளி’ ரகங்கள் தார் ஒன்றுக்கு ரூ.600-வரை விற்பனையானது. சில ரகங்கள் ரூ.300, ரூ.150 விற்பனையானது. கற்பூர வல்லி ஒரு தார் ரூ.100 முதல் ரூ.500 விற்பனையானது. ஏலரசி ரகம் ஒரு தார் ரூ.100 முதல் ரூ.250 வரையிலும் விற்பனை யானது. கிராண்ட் நைன் ரகம் ஒரு தார் ரூ.150 முதல் ரூ.450 வரை விற்பனையானது என்கிறார் திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் மொத்த வாழைத்தார் விற்பனையாளர் பழனிவேல். இந்த ஆண்டு திருவிழாக் காலங்களில் வாழைப்பழத்தின் தேவை கணிசமான அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. எதிர்பார்த்த விலையும் கிடைக்கவில்லை. இந்தாண்டு வாழை விவ சாயிகள் எதிர்பார்த்த பலனை அடைந்திருக்க மாட்டார்கள் என்றார் பழனிவேல்.