கேரளம் முழுவதும் வெறியாட்டம் திருவனந்தபுரம், ஜுன் 26- ராகுல் காந்தியின் அலுவலகம் தாக்கப்பட்டதை எதிர்த்து இரண்டாவது நாளாக வயநாட்டில் பரவலான வன்முறையை யுடிஎப் நடத்தியது. கல்பற்றாவில் தேசாபிமானி அலுவலகம் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. பத்தனம்திட்டாவில் அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது இருமுறை தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டது. கோட்டயத்தில் டிஎஸ்பி படுகாயம் அடைந்தார். சிபிஎம் கட்சியின் கொடிகள் மற்றும் சின்னங்கள் பரவலாக அடித்து நொறுக்கப்பட்டன. அண்மையில் வயநாட்டில் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற யுடிஎப் பேரணியின் போது தேசாபிமானி மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற கண்டனப் பேரணியின் போது கல்பற்றா பள்ளித்தாழே வீதியிலுள்ள தேசாபிமானி மாவட்ட அலுவலகம் சிலரால் தாக்கப்பட்டது. அலுவலகத்தின் தரைத்தளத்தில் வசிக்கும் கட்டிட உரிமையாளரான பெண் மற்றும் குழந்தைகள் பீதியில் அலறியபோது கற்கள் மற்றும் தடிகளுடன் அலுவலகத்தை நோக்கி விரைந்த கும்பல் திரும்பிச் சென்றது. கேஎஸ்யு மாநில தலைவர் கே.எம்.அபிஜித் தலைமையில் இந்த வன்முறை நடந்தது. கோட்டயத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய கலெக்டர் அலுவலக ஊர்வலமும் வன்முறையாக மாறியது. இதில் டிஎஸ்பி, எஸ்ஐ உள்பட 8 போலீசார் காயமடைந்தனர். நெடுங்கண்டம் முண்டியெருமத்தில் உள்ள சிபிஎம் உள்ளூர் கமிட்டி அலுவலகம் தாக்கப்பட்டது. உள்ளூர் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். கோட்டயத்தில் காங்கிரஸ் ரவுடிகளின் தாக்குதலில் காயமடைந்த டிஎஸ்பி சந்தோஷ் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பத்தனம்திட்டாவில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் வாகனம் மீது 2 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இரவு நேரத்தில் வீட்டின் அருகே பதுங்கியிருந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், அமைச்சரின் வாகனம் மீது கற்கள், தடிகள், கருப்புக் கொடிகளை வீசி தாக்குதல் நடத்தினர். காவல்துறை உரிய நேரத்தில் தலையிட்டது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்தனர். முன்னதாக அடூர் செல்லும் சாலையில் மறியல் செய்ய முயற்சி நடந்தது. ஊடக நிறுவனங்களுக்கு எதிரான வன்முறை ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும், தேசாபிமானி மாவட்ட அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுப்பப்பட வேண்டும் என்றும் முதன்மை ஆசிரியர் புத்தலத்து தினேஷ், பொது மேலாளர் கே.ஜே.தாமஸ் ஆகியோர் தெரிவித்தனர்.