விருதுநகர், மார்ச்.14- ஆனைக்குட்டம் அணைப் பகுதியில் ஏராளமான காகித அட்டை ஆலைகள் உள்ளதால், நகராட்சிக்கு சொந்தமான கிணறுகளில் உள்ள தண்ணீர் முழுவதும் உப்பு மற்றும் கசப்பு சுவையுடன் மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே, கிணறுகளில் உள்ள நீரை பரிசோதனை செய்திட விருதுநகர் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விருதுநகர் நகராட்சி பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆனைக்குட்டம் அணை உள்ளது. அர்ச்சுணா ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வரும் தண்ணீரை விருதுநகர் நகராட்சி நிர்வாகம், மோட்டார் மூலம் பம்ப் செய்து, அருகில் உள்ள கோடை கால நீர்த் தேக்கத்தில் தேக்கி வைக்கிறது. பின்பு, அதை சுத்திகரித்து நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கி வருகிறது. மேலும், ஆற்றின் கிழக்குப் பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்தும் கடந்த காலங்களில் குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. ஆற்றின் கரைகளில் நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்ட 11 கிணறுகள் உள்ளன. இதில் வரும் குடிநீரை பம்ப் செய்து தரை தள நீர்த் தேக்கத் தொட்டிக்கு கொண்டு வந்து, அங்கிருந்து விருதுநகர் நகராட்சி பகுதிக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை காலங்களில் கடும் வறட்சி நிலவும் போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அக்காலங்களில் மட்டுமே கிணற்று நீரை எடுத்து விநியோகம் செய்யப்படுவது வழக்கம். தற்போது, மழை பெய்த சில மாதங்களிலேயே கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான கிணறுகளில் உள்ள தண்ணீரானது உப்பு மற்றும் கசப்புத் தன்மையுடன் மாறியுள்ளன. இதனால், பொதுமக்கள் தண்ணீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அர்ச்சுணா ஆற்றில் தற்போது இருக்கும் தண்ணீரும் இதுபோன்ற உப்பு மற்றும் கசப்புத் தன்மையுடன் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஆற்றின் நீரானது, நல்ல நிலையில் இருந்து வந்தது. இதனால், பொது மக்கள் பருகும் போது எவ்வித உபாதைகளும் ஏற்படவில்லை.
ஆனால், தற்போது நகராட்சி நிர்வாகத்தினால் வழங்கப்படும் ஆனைக்குட்டம் பகுதி தண்ணீரானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு ஆனைக்குட்டம் அணைப் பகுதியின் தெற்கு பகுதியில் கடந்த காலங்களில் ஒரு காகித அட்டை தயாரிக்கும் ஆலை மட்டுமே இருந்தது. தற்போது 10க்கும் மேற்பட்ட ஆலைகள் அங்கு தொடங்கப்பட்டுள்ளன. அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் தான் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருக்கும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். காகித அட்டை ஆலைக் கழிவுகளால் தான் அர்ச்சுணா ஆற்றில் இருக்கும் தண்ணீரும், நகராட்சி கிணறுகளில் உள்ள தண்ணீரின் தன்மையும் மாறியுள்ளதாகவும், மழைக் காலங்களில் ஆலைக் கழிவுகள் அப்படியே ஆற்றுப் பகுதியில் விடப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகமானது, ஆனைக்குட்டம் அணைப் பகுதியில் உள்ள அனைத்துக் கிணறுகளில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்திட முடிவு செய்துள்ளனர்.