districts

img

தமிழை வழக்காடு மொழியாக்குக!

மதுரை, பிப்.24- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க ஒன்றிய அரசும் உச்சநீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில சிறப்பு மாநாடு மதுரை உலக தமிழ்ச் சங்க அரங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.  சங்கத்தின் மாநிலச் செயல் தலைவர்- தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் ஏ. கோதண்டம் தலைமை வகித்தார்.

மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜே. பாத்திமா, டி. சீனி வாசராகவன், ஏ. பாஸ்கரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநி லச் செயலாளர் எல். ஷாஜி செல்லன் வரவேற்றுப் பேசினார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.

மாநில பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பெ. மூர்த்தி, வழக்கறி ஞர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என். முத்து அமுதநாதன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். சிவக்குமார், மதுரை வழக்க றிஞர் சங்க செயலாளர் எஸ். மோகன்குமார், மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பி. ஆண்டிராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வரு மாறு:- ஜனநாயகத்தில் அரசு நிர்வா கப்  பணிகளும்,  நீதிமன்ற நடை முறைகளும் மக்களின் மொழியில் இருக்கவேண்டும்.

மக்களின் மொழியில் நீதி பரிபாலனம் நடக்கும் போது தான் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகத்தின் மாண்புகளும் இன்னும் சரியான புரிதலோடு மக்களுக்குப் போய்ச் சேரும். அதுவே உண்மையான ஜன நாயகமாக இருக்கும். உயர்நீதி மன்றகளில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில  மொழிகளில்  நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. கீழமை நீதி மன்றங்களில் அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழியாக இருக்கின்றன.

ஆனால் உயர்நீதி மன்றங்கள் வரை அந்தந்த மாநில மொழிகள் அலுவல் மொழியாக் கப்படும்போதே ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு கூடுதல் நம்பிக் கையை ஏற்படுத்த முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348(2)-இன் படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழி யாக இந்தி அல்லது சம்மந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகா ரம் அளிக்கிறது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்மதத்தைப் பெற்று அமல்படுத்த வேண்டுமென 1965-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அப்போதைய அமைச்சரவையின் முடிவு இன்று வரை நீடிப்பது,

தமிழ் மொழி அலுவல் மொழியாவதற்கு தடையாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348(2)-இன் படி இராஜஸ்தான், அலகாபாத், மத்தி யப்பிரதேசம், பாட்னா ஆகிய உயர்நீதிமன்றங்களில் வழக்கா டும் மொழியாக இந்தி அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றங்களில் அந்தந்த மாநில மொழிகள் அலுவல் மொழியாக் கப்பட வேண்டுமென்ற கோரிக் கையை அமலாக்காமல் ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் பாகு பாட்டுடன்  செயல்பட்டு வரு கின்றன.

அந்தந்த மாநில மொழி களில் உயர்நீதிமன்றம் செயல் படுவதற்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.  போதிய நிதி ஒதுக்குவதன் மூலம் தான் மக்களின் நீண்ட கால கோரிக்கை சாத்தியமாகும். இந்த கோரிக்கை அந்தந்த மாநிலங்களின் ஜன நாயக உரிமை சார்ந்தது என்பதை புரிந்து கொண்டு நடைமுறை சிக்கல்களை காரணமாகக் கூறா மல் ஒன்றிய அரசும் உச்ச நீதி மன்றமும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் நீண்ட கால மாகவே அந்தந்த மாநில உயர்நீதி மன்றங்களில் தங்கள் தாய்மொ ழியை அலுவல் மொழியாக்க வேண்டுமென கோரி வருகின்றன. தமிழை வழக்காடு மொழியா கவும், அலுவல் மொழியாகவும் கொண்டுவர வேண்டும். இந்தக் கோரிக்கை வழக்கறிஞர்கள், வழக் காடிகள், நீதிபதிகளின் கோரிக்கை மட்டுமல்ல. இது ஒட்டு மொத்த  தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை யாகும்.

இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசும் உச்சநீதிமன்ற மும் உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டு மென்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.  அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் ஆர். சௌரிராமன் நன்றி கூறினார்.