பெரம்பலூர், ஜூலை 25 - பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி பேரூராட்சியின் துணைத் தலைவராகவும், திமுக பூலாம்பாடி பேரூர் செயலாளராகவும் பதவி வகித்து வருபவர் செல்வலெட்சுமி. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு 7வது வார்டு கவுன்சிலராக நின்று வெற்றி பெற்றார். மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக உள்ள பூலாம்பாடி 7வது வார்டுக்கு உட்பட்ட அரசரடிக்காடு மற்றும் மலையடிவார பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பேரூராட்சி துணைத் தலைவர் செல்வலட்சுமி செய்து தருவதாக வாக்குறுதியை கொடுத்தார். வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அடிக்கடி கோரிக்கை விடுத்தும் வந்துள்ளனர். ஆனால், இதற்கு செல்வலட்சுமி முறையாக பதில் தருவதில்லை. மேலும் பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க முயற்சித்தால், அதற்கும் அவர் முட்டுக்கட்டை போடுவது பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது. தானும் செய்யாமல், அதிகாரிகளையும் செய்யவிடாமல் தடுத்து வந்ததால், ஞாயிறன்று வார்டு பொதுமக்கள் ஒன்று கூடி செல்வலட்சுமியின் வீட்டை முற்றுகையிட முடிவு செய்தனர்.
தகவல் அறிந்த செல்வலட்சுமியும், அவரது கணவரும் தலைமறைவாயினர். இதனையடுத்து வயலில் குடியிருக்கும் செல்வலட்சுமியின் வீட்டிற்கு சென்று சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கிடந்தனர். அப்போதும் பொதுமக்களை சந்திக்க வராததால், பேரூராட்சியின் தலைவர் பாக்யலட்சுமி மற்றும் அந்த வார்டு மக்கள் வீட்டை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அப்பகுதி மக்கள் துணைத் தலைவர் செல்வலட்சுமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், மக்களை அலைக்கழிக்கும் துணைத் தலைவர் சேகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.