பெரம்பலூர், மே 2 - பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ.வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி வசந்தா, ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், நான் பயிர் காப்பீடு கோரி மனு அளித்திருந்தேன். எனது 2018 ஆம் ஆண்டு நெல்பயிருக்கு இழப்பீடாக ரூ.10,948 4.9.2019 அன்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து விசாரித்த போது, பெருமத்தூர் பஞ்சாயத்து எழுத்தர் சுதந்திரா என்பவர் கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே ஆட்சியர் இதில் உரிய நடவடிக்கை எடுத்து எனது பயிர் காப்பீடு பணத்தை பெற்றுத் தர வேண்டும். மேலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.