புதுச்சேரி, மார்ச் 6- புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தலைக்கவசம் அணியவில்லையெனில் செவ்வாக்கிழமை (மார்ச் 7) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று போக்கு வரத்து அதிகாரி மாறன் கூறியுள்ளார். இதுகுறித்து கூறுகையில், “புதுச்சேரியில் அனைவரும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும். அதற்கு முன்னோடியாக காவல் துறையினர் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 7 முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்”என்றார். கடந்த ஆண்டில் மட்டும் ஹெல்மெட் அணியாத 13 ஆயிரத்து 292 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்தில் பலர் உயிரிழப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். கிழக்கு கடற்கரை சாலை, 100 அடி சாலை உட்பட முக்கிய சாலையோரத்தில் சுற்றுலா வாகனங்கள், லாரிகள், பேருந்து கள் போன்ற வாகனங்களை நிறுத்தக் கூடாது. அரசு ஒதுக்கிய இடத்தில்தான் நிறுத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.