districts

img

ரயிலில் போதைப் பொருள் கடத்தல்:  புதுச்சேரி அதிகாரிகள் பறிமுதல்

புதுச்சேரி மே 25- புவனேஸ்வரில் இருந்து புதுவைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் ‘ஆபரேசன் விடியல்’ தொடங்கப்பட்டது. அதனடிப்படையில் அவ்வப்போது காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புவனேஸ்வரில் இருந்து ரயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போதை தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் வம்சித ரெட்டி தட்லா தலைமையில் காவல் துறையினர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். சோதனையில் 4 வெளிமாநில பயணிகள் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான பான்பராக், பான்மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவற்றைக் கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசுக்குப்பம் பகுதியில் நடைபெற்ற சோதனையில் பெண் உள்பட 3 ஆப்பிரிக்க நாட்டினரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.