விழுப்புரம்,பிப்.2- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புனித அன்னாள் மழலையர் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் வால்டர் செகுடார் நர்சரி பள்ளி, விக்கிரவாண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவைகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு சாதாரண உள்ளாட்சி தேர்தல் 19.2.2022 அன்று நடைபெறும் என அறிவித்ததை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம் மற்றும் கோட்டக்குப்பம் உள்ளிட்ட 3 நகராட்சிகளுக்கும் மற்றும் அனந்தபுரம், அரகண்ட நல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர் மற்றும் விக்கிரவாண்டி உள்ளிட்ட 7 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற வுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம், திண்டிவனம் புனித அன்னாள் மழலையர் பள்ளியில் மற்றும் திண்டிவனம் வால்டர் செகுடார் நர்சரி பள்ளியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விக்கிரவாண்டி பேரூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான, விக்கிரவாண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. வாக்கு எண்ணும் அறை, பாதுகாப்பு அறை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்திடவும், தடுப்பு கட்டைகள் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் வந்து செல்லும் வழி, வாக்கு எண்ணும் மேசைகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.