districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நாளை துவக்கம் புத்தகங்களுடன் சைக்கிள், ஸ்கேட்டிங் பேரணி

புதுக்கோட்டை,  ஜூலை 27 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் புதன்கிழமை புத்தகங்களை ஏந்தியவாறு சைக்கிள் மற்றும் ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக்கோட்டையில் நடத்துகிறது. புத்தகத் திருவிழா குறித்து வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புத்தக வாசிப்பு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டையில் புத்தகங்களை ஏந்தியவாறு சைக்கிள் மற்றும் ஸ்கேட்டிங் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  மேலும், புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு பாடலின் குறுந்தகட்டையும் ஆட்சியர் வெளியிட்டார். பேரணி அண்ணாசிலை, கீழ ராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி, திகலர்திடல், சந்தைப்பேட்டை சாலை, பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பொது அலுவலக வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ், நகராட்சி ஆணையர் நாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், பொன்னமராவதி பேரூராட்சி அலுவலர் கணேசன், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.