districts

img

சீர்மரபினருக்கு டிஎன்டி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்திடுக!

புதுக்கோட்டை, மார்ச் 8 -தமிழ்நாடு முதலமைச்சர் தனது தேர்தல் வாக்குறுதிப்படி சீர்மரபினருக்கு டிஎன்டி (DNT) சான்றிதழ் வழங்க வேண்டுமென எம்.சின்னதுரை எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.

சீர்மரபினர் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் கோமாபுரம் மருத.பாலு மற்றும் நிர்வாகிகள் கரிகாலன், சேட்டு, கண்ணன் மற்றும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதிமுக எடப்பாடி அரசு ஒரு சமூகத்திற்கு ஒன்றிய அரசுக்கு டிஎன்டி  (DNT-Denotified Tribes) என்றும், மாநில அரசுக்கு டிஎன்சி (DNC- Denotified Communities) என்றும் சான்றிதழ் கொடுத்து ஏமாற்றியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் டிஎன்டி என ஒரே சான்றிதழ் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் 45/1994-இல் டிஎன்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அச்சட்டத்தை திருத்திய பிறகே, ஒரே டிஎன்டி என வழங்க முடியும் என்றுகூறி அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். இருப்பினும் அரசு விரும்பினால் வழங்கலாம் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்து அதற்கான கோப்பு முதல்வரின் முடிவுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு சட்டத்திற்கும் சாதிச்சான்று வழங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டிஎன்டி என்று வழங்குவதால் இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது. தொடர்ந்து எம்பிசி பிரிவில்தான் டிஎன்டி நீடிக்கும். அரசாணை 26 (நாள்:8.3.2019)-ல் பத்தி 4-ஐ மட்டும் திருத்தினால் போதுமானது. சட்டப்படி எந்த சிக்கலும் வரப் போவதில்லை.

மயிலேறும்பெருமாள் வழக்கில் மேற்படி சட்டம் 45/1994 பிரிவு 7-இன் கீழ் மாநில அரசுக்கு பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்த அதிகாரமுள்ளது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பெயர் மாற்றம் மட்டுமே செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.

டிஎன்டி ஒற்றைச் சான்று வழங்க, சட்டக் கருத்துக் கோரி தங்கள் துறையில் கோப்பு நிலுவையில் உள்ளது. விரைவில் கருத்துரை வழங்கி மேற்படி பெயர் மாற்றத்திற்கு ஆவன செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.