புதுக்கோட்டை, மார்ச் 10- பெண் கல்வி குறித்து இணையத் தொடராக வெளிவந்து வரவேற்பைப் பெற்ற ‘அயலி’ படக்குழுவினருக்கு புதுக்கோட்டையில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிராமத்தில் தடைகளைக் கடந்து கல்வி பயின்ற பெண் குறித்த கதையைக் கொண்ட ‘அயலி’ படம், ஓடிடி இணையதளத்தில் 8 பகுதிகளாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கான பாராட்டுவிழா புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி தலைமை வகித்தார். ‘அயலி’ படத்தின் இயக்குநர் முத்துக்குமார், திரைக்கலைஞர் பிரகதீஸ்வரன், எடிட்டர் கணேஷ், சச்சின் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர். விழாவில் தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன், மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், செயலாளர் ஸ்டாலின் சரவணன், பொருளாளர் கி.ஜெபாலன், புதுகை பிலிம் சொசைட்டி நிர்வாகி எஸ்.இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.