districts

கட்டுமாவடி 4 வருடங்களாக செயல்படாத மழைமானியை சீரமைக்க கோரிக்கை

அறந்தாங்கி, அக்.31 - புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் நான்கு வருடங்களாக செயல்படாமல் இருக்கும் மழைமானியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களில் மழை அளவை மி.மீ அல்லது செ.மீ அளவுகளில் பதிவு செய்ய மழைமானி  பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஒரு இடத்தில் 24 மணி நேரத்தில் பெய்யக்கூடிய மழையின் அளவு பதிவு செய்யப்படுகிறது. இந்த மழைமானி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது.  இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மழைமானி மீட்டர் பொருத்தப்பட்டு, மழையளவு பதிவு செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உப்பளம் சாலையில் மழைமானி மீட்டர் செயல்பட்டு வந்தது. இந்த மழைமானியின்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக அளவு மழை பெய்யும் இடமாக கட்டுமாவடி திகழ்ந்தது. ஒவ்வொரு வருடமும் 24 மணி நேர மழை அளவுகளில், கட்டுமாவடியில் அதிகபட்ச மழை பெய்து, அது பதிவு செய்யப்பட்டு வந்தது. 12 வருடங்களுக்கு முன்பு மாநிலத்திலேயே அதிகபட்ச மழையாக ஒரே நாளில் சுமார் 28 சென்டிமீட்டர் (280 மி.மீ) மழை கட்டுமாவடியில் பதிவு செய்யப்பட்டது.  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மழைமானி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதை சரி செய்வதற்கு அதிகாரிகள் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி, கட்டுமாவடியில் உள்ள மழைமானி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது.