districts

img

பத்திரிகையாளர்கள் உண்மைத் தன்மையை உறுதிசெய்வது அவசியம் ஊடகவியலாளர் லட்சுமி சுப்ரமணியம் கருத்து

புதுக்கோட்டை, செப்.18- பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிடும்போது அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம் என்றார் ஊடகவியலாளர் லட்சுமி சுப்பிரமணியம். கூகுள் நியூஸ் இனியேட்டிவ் இந்தியா, டேட்டா லீட்ஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை சார்பில் புதுக்கோட்டையில் ‘உண்மைத்தன்மை உறுதி செய்தல்’ பயிலரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. இப்பயிலரங்கில், மூத்த ஊடகவியலாளரும் ஜிஎன்ஐ பயிற்சியாளருமான லட்சுமி சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது: “சமூக வலைதளங்களின் மூலமாக கிடைக்கும் படங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியம். தகவல் விரைவாக கிடைக்கிற அதே நேரத்தில் தவறான தகவல்களும், பொய்யான தகவல்களும் விரைவாகப் பரவுகின்றன. சிலவற்றை உள்நோக்கத்தோடு பரப்புகின்றனர். இவற்றால் சமூகப் போக்கு தவறாக வழி நடத்தப்படுகிறது. பத்திரிகையாளர்கள் உண்மைத் தன்மையை உறுதி செய்து வெளியிடுவது அவசியம். அவ்வாறு உண்மைத் தன்மையை அறிய கூகுள் நிறுவனம் பல்வேறு வழிகளை மென்பொருளாக ஏற்படுத்தியிருக்கிறது. சிறப்புக் கட்டுரைகளைத் தயார் செய்யும் போது, அரசிடமிருந்து உண்மையான தகவல்களைப் பெறுவதற்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவது நல்லது.

தவறான தகவல்களை வெளியிட்டால் ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மைப் பாதிக்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார். பயிலரங்கிற்கு புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்க தலைவர் சு.மதியழகன் தலைமை வகித்தார். அரசு மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர் ஆர்.ராஜ்குமார், வாசகர் பேரவையின் செயலர் பேரா. சா. விஸ்வநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து, தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக பத்திரிகையாளர் சங்க செயலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்க, பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார். இப்பயிலரங்கில் பத்திரிகையாளர்கள், இதழியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

;